7 பேர் மாயமான மசினகுடியின் மறுபக்கம்.. ஒரு பக்கம் அழகு.. இன்னொரு பக்கம் அபாயம்!
சுற்றுலா பயணிகள் வனத்துறையினரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்துகிறார்கள்.
Recommended Video
ஊட்டி: எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென ஓங்கி உயர்ந்த மரங்கள்.. பறவைகள், விலங்குகளின் வினோத ஓசைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது மசினகுடி கிராமம்.
ஊட்டியிலிருந்து முதுமலை சரணாலயத்துக்கு செல்லும் வழியில் 35 கி.மீ. தொலைவில் இருக்கும் இடம். மிக மிக அழகான இடம். முக்கியமான டவுன் என்றாலும் இங்கு வசிப்பது பெரும்பாலும் பழங்குடி மக்களே. பிக்னிக் செல்ல வேண்டுமானால் இளைஞர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் மசினகுடிதான்.
பழங்குடி மக்கள்
காரணம், மசினகுடியை சுற்றிலும் எங்கு பார்த்தாலும் காடுகள்தான். மான், யானை, சிறுத்தை, ஏன் புலி கூட அசால்ட்டாக நடமாடும். ஆனால் வனவிலங்குகளுக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் வனத்துறையினருடன் பழங்குடி மக்களும் விலங்குகளை சேர்ந்தே பாதுகாத்து வருகிறார்கள்.
மிரள வைக்கும் யானைகள்
மசினகுடியில் தேயிலை தோட்டங்கள், தெப்பக்காடு யானைகள் முகாம், ரப்பர் தோட்டங்கள், பறவைகள் சரணாலயம் என நிறைய இடங்கள் சுற்றுலா பயணிகளை தன்பக்கம் இழுத்து வருகிறது. குறிப்பாக கூட்டம் கூட்டமாக யானைகள் தனது குட்டிகளுடன் குளித்து, ஆட்டம்போடுவது கொள்ளை அழகு. இருந்தாலும் இரவு நேரங்களில் இந்த யானைகள் பிளிறும் சத்தம் ஊர்மக்களை மிரள வைக்கும்.
வனத்துறை நிபந்தனை
பொதுவாக இந்த மசினகுடி பகுதியில் காட்டுக்குள் தனியாகவே யாரும் நடந்து செல்லக் கூடாது. ஆடு, மாடு மேய்க்க வருபவர்கள் எத்தனையோ பேர் சிறுத்தை, புலிக்கு இங்கு பலியாகி இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் மசினகுடி வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என்று வனத்துறையினர் விடுத்து கொண்டே இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல், சாலை ஓரங்களில் பேப்பர் போடக்கூடாது, சிகரெட் பிடிக்கக்கூடாது, சாப்பிட்ட பிளாஸ்டிக் தட்டு, டம்ளர்களை போடக்கூடாது என்று எக்கச்சக்க நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள்
ஆனால் சிலர் வனவிலங்குகளை பார்க்கும் ஆசையிலும், அதனை படம்பிடிக்கும் நோக்கத்திலும் வனத்துறையினருக்கு தெரியாமல் மசினகுடியை சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் நுழைந்துவிடுவார்கள். இவர்களுக்கு உள்ளூர் மக்களில் ஒருசிலர் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் இருந்து தவறுகளை இழைத்து விடுவதுண்டு.
அலட்சியமே காரணம்
இப்படி வனத்துறைக்கு தெரியாமல் காட்டுக்குள் சென்ற வெளிநாட்டு நபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் விலங்குகள் தாக்கி கோரமான முறையில் உயிரிழந்துள்ளனர். தகுந்த முறையில் பாதுகாப்பு இல்லாமல் இங்கு சுற்றுலா வரும் பயணிகளின் அலட்சியங்களே பெருமளவு உயிரிழப்புகளுக்கு காரணமாக விடுகிறது.
மாயமான 7 பேர்
வனப்பகுதி என்று தெரிந்தும், விலங்குகள் நடமாடும் இடம் என தெரிந்தும், அனுமதியின்றி போகக்கூடாது என்ற தடை உத்தரவு தெரிந்தும், ஒருசில சுற்றுலா பயணிகளின் இயற்கை ஆர்வம், அவர்களின் உயிரையே காவு வாங்க வைத்து விடுகிறது. சென்னையைச் சேர்ந்த 7 பேர் தற்போது மசினகுடி வனப்பகுதிக்குச் சென்று மாயமான சம்பவம் பரபரப்பைக் கூட்டியுள்ளது.