சென்னையில் உள்ள ஜெ.தீபா அலுவலகத்தின் மீது மர்மநபர்கள் கல்வீச்சு: போலீஸார் விசாரணை
சென்னையில் உள்ள ஜெ.தீபாவின் கட்சி தலைமையகத்தின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
Recommended Video
சென்னை : சென்னை தி.நகர் பகுதியில் இயங்கி வந்த ஜெ.தீபாவின் கட்சி தலைமையக அலுவலகத்தில் நேற்று கல்வீச்சு தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெயலலிதா போல உருவ ஒற்றுமை கொண்டிருந்த இவரை, அதிமுகவில் ஏற்பட்ட பிரச்னைகளை அடுத்து தொண்டர்கள் இவர் பின்னால் அணி திரண்டனர்.
இதையடுத்து தீவிர அரசியலில் குதித்தார் ஜெ.தீபா. அதிமுகவில் இடம் இல்லாத நிலையில், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்கிற பெயரில் தனிக்கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால், தொடர்ந்து உற்சாகமற்ற செயல்பாடுகளினால் இவர் பின்னால் இருந்த அணி கரைந்தது. இருப்பினும் இன்னும் சிலர் இவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கூட ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கலில், சரியாக நிரப்பப்படாமல் இருந்த இவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இவரது கட்சி தலைமையகம் சென்னை தி.நகரில் உள்ள சிவஞானம் தெருவில் இவரது வீட்டின் அருகே இயங்கி வந்தது.
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைமையகத்தின் மீது மர்மநபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலகத்தின் கதவு, ஜன்னல் கண்ணாடி ஆகியவை சேதமடைந்து உள்ளன.
இது தொடர்பாக மாம்பலம் காவல்நிலையத்தில் தீபா புகார் அளித்து உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.