சினிமாவை போன்று அரசியலிலும் யாரோ ரஜினியை இயக்குகிறார்கள்: திருமாவளவன் பேட்டி
சினிமாவை போன்று அரசியலிலும் யாரோ ரஜினியை இயக்குவதா திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவை: சினிமாவை போன்று அரசியலிலும் யாரோ ரஜினியை இயக்குகிறார்கள் என்று தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என கூறும் ரஜினி, நிஜ வாழ்க்கையில் வேறு நிலைபாட்டை கொண்டவர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை சந்துத்து ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவியும் செய்துள்ளது மகிழ்ச்சி. ஆனால், காவல்துறை, ஆலை பற்றி முதல்வர் கூறியதையே ரஜினி எதிரொலித்துள்ளார்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ்., மதவாத சக்திகளின், தனியார் நிறுவனங்களின் குரலாகவே ரஜினி குரல் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின், மக்களின் குரலாக இல்லை. தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகள் என ரஜினி கூறுவது வேதனை அளிக்கிறது. அவர் தானாக பேசுகிறார் என நம்ப முடியாத அளவிற்கு உள்ளது.
சினிமாவை போன்று அரசியலிலும் யாரோ ரஜினியை இயக்குவதுபோல் தோன்றுகிறது. யார் அந்த சமூக விரோதிகள் என தமிழக அரசும், ரஜினியும் கூற வேண்டும். திமுக மாதிரி சட்டமன்றம் நடத்தியது ஒரு வகையான போராட்ட வடிவம். முதல்வர் பதவி விலகி விட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்பதில்லை. மாறாக அனைத்திற்கும் முதல்வர் பொறுப்பு என்று முதல்வருக்கும், மக்களுக்கும் உணர்த்தவே அந்த கோரிக்கையை முன் வைக்கப்படுகிறது.
வேல்முருகனை அச்சுறுத்தவும், ஒடுக்கவும் அரசு முயல்கிறது. அவரை உடனே விடுவிக்க வேண்டும். காவிரி, ஹைட்ரோகார்பன் என மக்கள் பிரச்னைக்கு தமிழகம் போராடி வரும் நிலையில், அதற்கு குரல் கொடுக்காமல் சிவகங்கையில் மக்களை தாக்குவது கண்டனத்திற்குரியது. பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மாநில அரசை குறை கூறுவது சரியில்லை. எண்ணெய் நிறுவனங்கள் தாமாக விலையை நிர்ணயித்துக்கொள்ளும் அனுமதியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.