அது என் கழுத்துக்கு வைத்த குறி... கத்தி வெட்டு குறித்து ரோஜா!
நகரி: தன்னைக் கொல்ல சதி நடப்பதாகவும், கோவில் திருவிழாவில் தனது கழுத்துக்குக் குறி வைக்கப்பட்ட கத்தி, தவறுதலாக கையில் பட்டதால் தான் உயிர் தப்பியதாக பரபரப்புக் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார் நகரித் தொகுதி எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா.
ஆந்திர மாநிலம் நகரியில் நடந்த ஜாத்திரை திருவிழாவில் பங்கேற்ற அத்தொகுதி எம்.எல்.ஏ -வான நடிகை ரோஜா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கோவிலில் முதல் மரியாதை தருவது தொடர்பான பிரச்சினையில் ரோஜாவில் கையில் கத்தி வெட்டுப் பட்டது. இதில் ரோஜாவின் வலது கையில் 3.செ.மீ நீளத்துக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
மேலும், தாக்குதலின் போது தெலுக்குதேசம் கட்சியைச் சேர்ந்த பாபுரெட்டி என்பவர் தன்னைக் கழுத்தைப் பிடித்து தள்ளியதாக குற்றம் சாட்டினார் ரோஜா. இது தொடர்பாக போலீசில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி நகரி போலீஸ் நிலையம் முன்பும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களுடன் நேற்று திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில், தன் மீதான தாக்குதல் குறித்து நடிகை ரோஜா கூறியதாவது:-
மாபியாவின் பிடியில்...
சந்திரபாபுநாயுடு குண்டர்களை ஏவி எதிர்க்கட்சியினரை மிரட்ட பார்க்கிறார். மாபியாவின் பிடியில் அவர் சிக்கி உள்ளார்.
நடவடிக்கை இல்லை...
அவரது கட்சியை சேர்ந்த பாபுரெட்டி என் கழுத்தை நெறித்து தள்ளினார். அதுபற்றி புகார் செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பிறகு எனது கையில் கத்தியால் வெட்டி உள்ளனர்.
கொல்ல சதி...
அந்த கத்தி எனது கழுத்தை குறிவைத்து வந்தது. நான் தடுத்ததால் கையில் காயம் ஏற்பட்டு உள்ளது. முழுக்க முழுக்க என்னை கொல்ல நடந்த சதிதான்.
மன்னிப்பு கேட்க வேண்டும்...
இதற்கான சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் இதற்கு அவர் துணை போய் உள்ளார் என்று அர்த்தமாகி விடும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தலைவி...
இதற்கிடையே, ரோஜா தாக்கப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் அவரது கணவர் இயக்குநர் செல்வமணி. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது :-‘‘எங்கள் குடும்பத்தில் தலைவியாக ரோஜா உள்ளார். அவருக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டதால் நாங்கள் அனைவரும் பயந்து போய் விட்டோம். ரோஜா தைரியமாக செயல்படுபவர்.
உயிருக்கு ஆபத்து...
ஆனாலும், அவரது உயிருக்கு உலை வைக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. ரோஜா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சந்திரபாபுநாயுடு தான் பொறுப்பு'' என்றார்.