மரணமடைந்த அப்பா.. வீட்டுக்குள்ளேயே சமாதி கட்டிய மகன்.. பெரம்பலூரில் ஷாக்!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தந்தையின் விருப்பப்படி வீட்டுக்குள்ளேயே தந்தைக்கு மகன் சமாதி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்தினர் புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசாருக்கும், இறந்தவரின் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே களரம்பட்டி கிராமத்தில் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு வயது 67. விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தான் உயிரிழந்தால் வீட்டுக்குள்ளேயே சமாதி கட்ட வேண்டும் என்று இவர் தனது விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இவரது சாவு குறித்து ஈரோட்டில் இருக்கும் அவரது மகன் பாலகிருஷ்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 40. லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். களரம்பட்டி கிராமத்திற்கு வந்த இவர் தனது தந்தையின் விருப்பப்படி வீட்டுக்குள்ளேயே அவரை சமாதி வைக்க குழி தோண்டினார். இதற்கு ஊர் மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது உறவினர்கள் ஆதரவுடன் வீட்டின் ஜன்னல் அருகே அமர்ந்த நிலையில் ராமசாமிக்கு செங்கற்களால் சமாதி கட்டினர். மேலே கற்களையும் வைத்தனர்.
இதுகுறித்து கிராமத்தினர் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் அளித்தனர். பின்னர் பெரம்பலூர் தாசில்தார் மற்றும் போலீசாரிடமும் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் போலீசாருடன் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ராமசாமியின் உடலை அப்புறப்படுத்த சமாதியை உடைக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முயற்சித்தனர்.
செப். முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமழிசை சந்தை இயங்காது... காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு
இதற்கு பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு பாலகிருஷ்ணன் குடும்பத்தினரை போலீசார் அழைத்து வந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
வீட்டுக்குள் இதுபோன்ற இறந்தவரை அடக்கம் செய்வது தவறு என்றும் இதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தனது தந்தையின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய பாலகிருஷ்ணன் ஒப்புக் கொண்டார். பின்னர் அவரது தந்தையின் உடலை தோண்டி எடுத்து, மயானத்தில் தகனம் செய்தனர்.