மாமனாரைக் கொல்ல கூலிப்படை ஏற்பாடு செய்த மருமகன் கும்பலோடு கைது
கோவை: கோவையில் மாமனாரைக் கொல்லவதற்காக கூலிப்படையை ஏவிய மருமகன் கும்பலுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் போத்தனுார் பகுதி வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். இவரது மனைவி பெயர் இராஜேஸ்வரி.
இவர்களின் மகள், நிஷாப்பிரியா என்பவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவருக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
ஏமாற்றி திருமணம்:
திருமணத்திற்கு முன்பாக விமானப் பணிக்கான பயிற்சி மையம் நடத்துவதாக கூறிய விக்னேஸ்வரன் பலரிடம் பணமோசடி செய்துள்ளதும், இவர் மீது சிபிசிஐடியில் வழக்கு பதிவாகியுள்ளதும் பின்னர் தெரியவந்தது.
பணத்திற்காக கொடுமை:
இந்நிலையில், பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு கூறி, நிஷாப்பிரியாவை விக்னேஸ்வரன் கொடுமைப்படுத்தியுள்ளார். இதையடுத்து மாணிக்கம் போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து விக்னேஸ்வரன் மற்றும் அவரது தந்தை குணசேகரன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் கூடா சகவாசம்:
சிறைலிருந்தபோது, திருட்டு வழக்கு கைதியான கோமதிசங்கர் மற்றும் கொலை முயற்சி வழக்கு கைதியான நாகராஜ் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஜாமினில் வந்த விக்னேஸ்வரன், மாமனாரை பழி வாங்கவும், அவரிடம் உள்ள ரூபாய் 2 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்கவும் திட்டமிட்டார்.
குடும்பத்தோடு கொலை:
மாமானார், மாமியார், மைத்துனரை குடும்பத்தோடு கொலை செய்து விட்டால், சொத்துகள் அனைத்தும் நிஷாப்பிரியாவுக்கு வந்து விடும், அத்தனை சொத்துகளையும் தானே அனுபவிக்கலாம் என நினைத்துள்ளார்.
கூலிப்படை நண்பர்கள்:
இதற்காக சிறையில் சந்தித்த பழைய குற்றவாளிகளை உதவிக்கு அழைத்து, புதிதாக வாங்கியிருந்த கார் மற்றும் 40 ஆயிரம் ரூபாயை முன் பணமாக கொடுத்து மாமனார் குடும்பத்தை கொலை செய்யும் வேலைக்கு அனுப்பியுள்ளார்.
கொலைக்கு முன்பே சிக்கியவர்கள்:
காரில் கோவை வந்த கூலிப்படையினர் ஈச்சனாரி மேம்பாலத்துக்கு அடியில் காரை நிறுத்தி மது அருந்திவிட்டு கொலை செய்வதற்கு கிளம்பும் முன்பாகவே போலீசில் சிக்கி கொண்டனர். இதில் தொடர்புடைய விக்னேஸ்வரனை போலீசார் தேடிவருகின்றனர்.