உன்னுடன் என் மகள் குடும்பம் நடத்த மாட்டாள்.. நிராகரித்த மாமியார்... வெட்டித் தள்ளிய மருமகன்!
மனைவியை குடும்பம் நடத்த மாமியார் அனுமதிக்காததால் அவரை அரிவாளால் வெட்டிக் காயப்படுத்தினார் மருமகன்.
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தன்னுடன் குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மாமியார் மறுத்ததால் கோபமடைந்த மருமகன் அரிவாளை எடுத்து மாமியாரை சரமாரியாக வெட்டி விட்டார். இதில் மாமியார் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பென்னாகரம் அருகே உள்ள தேக்கன்கொள்ளை கிராமத்தில் வசித்து வருபவர் 28 வயது குமார். இளநீர் வியாபாரியான இவருக்கும், சரஸ்வதி என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு சரஸ்வதி தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
அங்கு வந்த குமார் மனைவியை தன்னுடன் அனுப்பக் கோரி மாமியார் கவுரம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் உன்னுடன் எனது மகளை இனிமேல் அனுப்ப மாட்டேன் என்று மாமியார் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த குமார் அரிவாளை எடுத்து கவுரம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்து துடித்தார் கவுரம்மாள்.
அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குமாரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.