ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுக்குமாறு மிரட்டல்.. சசிபெருமாள் மகன் உயிருக்கு ஆபத்து: வைகோ
ஈரோடு: மதுவிலக்குக்காக போராடி உயிரிழந்த சசிபெருமாள் மகன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, வைகோ இவ்வாறு கூறினார். அவர் கூறுகையில்,
மதுவிலக்குக்காக போராடி உயிரிழந்த சசிபெருமாள் மகன் விவேக் முதல்வருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று அதிமுகவினரால் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, விவேக் பூங்கொத்து கொடுக்க வேண்டும் என்று அதிமுகவினரால் மிரட்டப்பட்டார். தனது தந்தையின் உயிர் போக காரணமாக இருந்தவர்களுக்கு பூங்கொத்து தர முடியாது என்று விவேக் கூறிவிட்டார். இதனால் விவேக் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால்தான் விவேக்கை என்னுடனே அழைத்து செல்கிறேன்.
இவ்வாறு பேசிய வைகோ, வாகனத்தின் உள்ளே அமர்ந்திருந்த விவேக்கை எழுப்பி, அவரை பொதுமக்களிடம் காண்பித்தார்.