நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்.. மகன் பரபரப்பு பேட்டி!
சென்னை: தனது தந்தைக்கு தலைமை இன்ஜினியரிடமிருந்து அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அதனால் அவர் நெருக்கடிக்குள்ளாகியிருக்கலாம் என்றும் தற்கொலை செய்துகொண்ட நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமியின் மகன் கூறியுள்ளார்.
நெல்லை வேளாண் அதிகாரியான இன்ஜினியர் முத்துகுமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அரசியல் மேலிட அழுத்தம் காரணமாகவே, அவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.
இதனிடையே வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து முத்துகுமாரசாமி குடும்பத்தார், நெல்லையில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமியின் தற்கொலை தொடர்பான வழக்கில் புதிய திருப்பமாக, பிப்ரவரி மாதம் முத்துகுமாரசாமி பயன்படுத்திய தொலைபேசி அழைப்புக்களின் பட்டியலை ஆங்கில தனியார் டிவி ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. அதில் பிப்ரவரி 1 ம் தேதி முதல் 20ம் தேதி வரை முத்துகுமாரசாமிக்கு 600 தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாகவும், அதில் கடைசியாக முத்துகுமாரசாமி பேசிய தொலைபேசி அழைப்பிற்கும் அவரது மரணத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆங்கில சேனலுக்கு முத்துகுமாரசாமி மகன், சேதுராம் வினோத் அளித்த பேட்டியில், "அரசியல் நெருக்கடியால் நாங்கள் சென்னைக்கு குடி பெயரவில்லை. போலீஸ் வழக்கை வாபஸ் பெறுமாறு, ஆளும் கட்சி எங்களை மிரட்டவும் இல்லை.
எனது தந்தை, தலைமை இன்ஜினியர் செந்திலிடமிருந்து வந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். ஏனெனில், தற்கொலை செய்யும் முன்பாக, எனது தந்தைக்கு, செந்திலிடமிருந்துதான் அதிகப்படியான தொலைபேசி அழைப்புகள் வந்தன. இந்த தகவலை போலீசாரிடம் அளித்துள்ளேன்" என்றார்.
முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கை தமிழக சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருவதும், சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதும் தெரிந்ததே.