2011க்குப் பிறகு முதல் முறையாக ஒரே மேடையில் பேசப் போகும் கருணாநிதி, சோனியா!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மே 5ம் தேதி தீவுத் திடலில் நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் ஒரே மேடையில் கலந்து கொண்டு பேசவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சிறப்புப் பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்துள்ளனர்.
சோனியா காந்தி மே 5ம் தேதி சென்னை வருகிறார். அன்று மாலை தீவுத் திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். திமுக -காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துப் பேசுகிறார். திமுக தலைவர் கருணாநிதியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.
இதையொட்டி டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னைக்கு நேற்று வந்தனர் இவர்கள் சோனியாகாந்தி பேசவிருக்கும் தீவுத்திடல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். பொதுக்கூட்ட மேடை, கார் நிறுத்தும் இடங்கள், பாதுகாப்பு வசதிகள், பார்வையாளர்கள் அமரும் பகுதி, வேட்பாளர்கள் அமரும் பகுதி, வரவேற்பு அளிப்பவர்களின் பெயர் பட்டியல் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது காங்கிரஸ் கட்சி மாநில பொதுசெயலாளர் ஜோதி, பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் கோபண்ணா, துணைத்தலைவர் ஏ.பி.சி.சண்முகம், திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் பல்துறை அதிகாரிகளுடனும் பாதுகாப்புப் படையினர் ஆலோசனை நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
2011க்குப் பிறகு
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் திமுக -காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அப்போது கருணாநிதி, சோனியா கூட்டாக பேசி வாக்கு சேகரித்தனர். அதன் பின்னர் நடந்த லோக்சபா தேர்தலில் இந்தக் கூட்டணி உடைந்தது. எனவே 2011ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் முதல் முறையாக கருணாநிதியும், சோனியாவும் ஒரே மேடையில் பேசவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.