ராகுலால் சாதிக்க முடியாததை சோனியா காந்தி சாதித்தது எப்படி?
சென்னை: மகனால் சாதிக்க முடியாததை தாய் சாதித்து காட்டியிருக்கிறார். வழக்கமாக தாய் எட்டடி பாய்ந்ததால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். ஆனால் இந்த முறை குட்டி நான்கடி கூட பாய முடியாத நிலையில் தாய் 32 அடிக்கு மேல் பாய்ந்து சாதித்துக் காட்டியிருக்கிறார்.
நடை பெற்று முடிந்த மஹாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி விவரமறிந்தவர்கள் வியக்கத் தக்க அளவுக்கு சாதித்துக் காட்டியிருக்கிறது. இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை தான். ஆனால் பலரது எதிர்ப்பார்ப்புகளையும், கணிப்புகளையும் மீறி காங்கிரஸ் எம்எல்ஏ க்களை வென்றிருக்கிறது.
மஹாராஷ்டிராவில் குறிப்பாக தேர்தலுக்கு முன்பே அங்கு ஆண்டு கொண்டிருக்கும் பாஜக - சிவ சேனா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு விடும் என்றே பலரும் கணித்தனர். காங்கிரஸ் கட்சியே தான் மஹாராஷ்டிரா வில் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று நினைக்கவில்லை. ஷரத் பவாரின் தேசீயவாத காங்கிரஸ் கட்சியுடன் (என்சிபி) கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட காங்கிரஸ் மஹாரஷ்டிர சட்டசபையின் மொத்த எம்எல்ஏ தொகுதிகளில் 46 எம்எல்ஏ க்களை வென்றது. தற்போதய நிலையில் இதுவே ஒரு ரெகார்டு அதாவது சாதனை என்றே சொல்ல வேண்டும்.
ஹரியானாவை பொறுத்த வரையில் மொத்த முள்ள 90 இடங்களில் முதலில் வந்த கருத்துக் கணிப்புகளின் படி அங்கு தற்பொழுது ஆண்டு கொண்டிருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாக்குப் பதிவுக்கான நாட்கள் நெருங்க, நெருங்க காங்கிரஸ் அதிக இடங்களை வெல்லும், ஆனால் ஆட்சியமைக்கும் அளவுக்கு வெற்றி பெறாது. பாஜக வும் தனி மெஜாரிட்டி பெறாது. தொங்கு சட்டமன்றம்தான் அமையும் என்றே சில கருத்துக் கணிப்புகள் கூறின. அதே போல பாஜக வுக்கு 40 இடங்களும், காங்கிரஸூக்கு 31 இடங்களும் கிடைத்தன. பாஜக ஜன்நாயக் ஜனதா பார்டி (ஜேஜேபி) என்ற கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து விட்டது.
இந்த இரண்டு மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன்பே எப்படியும் பாஜக தான் வெல்ல போகிறது, தாங்கள் தோற்கத்தான் போகிறோம் என்றே காங்கிரஸ் நினைத்தது. ஆனால் காங்கிரசின் விரக்தியையும் மீறி காங்கிரஸ் வெற்றி பெற்றது பலரையும் ஆச்சரியத்தையும், காங்கிரஸூக்குள் ஓரளவுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இந்தாண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கு பின்பு ஏற்பட்ட தலைமை மாற்றம்தான். தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி அறிவித்தார். அவரது முடிவை மறுபரீசலனை செய்ய மேற்கொள்ளப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போயின. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தாற்காலிக தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.
மஹாராஷ்டிரா மற்றும் ஹரியாணாவில் காங்கிரஸ் கெளரவமான அளவுக்கு எம்எல்ஏ க்களை பெற்றதற்கு முக்கியமான காரணம், இந்த இரண்டு மாநிலங்களின் பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர்களை சோனியா காந்தி மாற்றியதுதான். புதிய தலைவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்கள் தங்களது மாநிலங்களில் தேர்தல்களை வெல்லக் கூடிய தகுதி பெற்றவர்களாக இருந்ததுதான் என்றே கணிக்கப் படுகிறது.
"ராகுல் காந்தி அவருக்கே சொந்தமான கற்பனாவாத அரசியலில் இருந்து கொண்டிருக்கிறார். இந்திய அரசியிலின் வெற்றிச் சூத்திரத்தின் அடிப்படைகள் அவருக்குத் தெரியவில்லை. சோனியா காந்திக்கு தெரிந்திருக்கிறது. இது தான் மகன் தோற்றுப் போனதற்கும், தாய் வெற்றி பெற்றதற்குமான வித்தியாசம். மேலும் ஒரு தோல்விக்கே பதவி விலகுவது என்பது எந்த ஒரு பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சி தலைவர்கள் கூட செய்யக் கூடாத காரியமாகும்" என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர். காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் ராகுல் காந்தியின் முடிவு பற்றி இப்படி சொல்லுகிறார்; "கப்பல் மூழ்கி கொண்டிருக்கும் போது கப்பலின் கேப்டன் கப்பலில் இருந்து குதித்து ஓடி விட்டார்".
சோனியா காந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்றவுடன் செய்த முதல் காரியம் இரண்டு மாநிலங்களின் தலைவர்களை மாற்றியது. அவர்களுக்கு ஒரளவுக்கு தன்னிச்சையாக செயற்பட அனுமதி கொடுத்தது. "பல மாநிலங்களில் இன்னமும் காங்கிரஸ் வெற்றிக் கனியை சுவைக்காமல் இருப்பதற்கு காரணம், அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு செயற்படுவதற்கு போதிய சுதந்திரம் இல்லாமல் இருப்பதுதான். போதிய சுதந்திரம் கொடுக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியால் மீண்டும் புத்துயிர் பெற்று தேசீய அளவில் வெற்றியை பெற முடியும்" என்று கூறுகிறார் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் துணை முதலமைச்சராக இருக்கும் ராஜேஷ் பைலட்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மாநில அரசின் திட்டங்களை, அதாவது தன்னுடைய அரசின் திட்டங்களை எதிர்த்து உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தவுமே தான் அனுமதிப்பாதகவும் பைலட் மேலும் கூறுகிறார்; "ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசின் திட்டங்களை எதிர்த்தே உள்ளுர் அளவில், மாவட்ட அளவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டங்களை நடத்த நான் அனுமதி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் உட் கட்சி ஜனநாயகம். இந்த உட்கட்சி ஜனநாயகம் தான் காங்கிரஸ் கட்சியின் உயிர்நாடி".
ஹரியானாவில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் பேசுவதாக இருந்த இரண்டு தேர்தல் பிரச்சார கூட்டங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப் பட்டன. இதற்கு காரணம், கடைசி நேரத்தில் இருவரையும் ஹரியாணாவுக்கு பிரச்சாரத்துக்கு வர வேண்டாமென்று அம் மாநில முன்னாள் முதலமைச்சர் பூபேந்திர சிங் ஹுடா கேட்டுக் கொண்டது தான் என்று சொல்லப் படுகிறது. ஆனால் அதனையும் மீறி அங்கே காங்கிரஸ் 31 இடங்களை வென்றது பாஜக வை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பதாக சொல்லுகிறார்கள்.
இதில் மற்றோர் ஆச்சரியமான விஷயம் தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட ஒரு வார காலமாகியும் ராகுல்காந்தி இது பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் இருப்பது. வழக்கமாக முக்கிய பிரச்சனைகளுக்கு ட்வீட் போடும் ராகுல் காந்தி இந்த முறை மெளனம் காக்கிறார். அந்த மெளனத்துக்கான காரணம் அவருக்கும், சோனியா காந்திக்கும் மட்டுமே தெரிந்ததாக இருக்கலாம் தான்.
நாடு விடுதலை அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பற்றி பேசிய மஹாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என்று கூறினார். ஒரு வேளை மஹாத்மா காந்தியின் யோசனையை ராகுல் காந்தி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாரா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான். மகனின் முயற்சியை தாய் முறியடிப்பாரா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றே தற்போதைக்கு தோன்றுகிறது.
- ஆர்.மணி