அதிமுகவில் வெடித்தது பூகம்பம்.. டிடிவி தினகரனுக்கு சூலூர் எம்எல்ஏ கனகராஜ் நேரில் வாழ்த்து!
ஆர்.கே.நகரில் வெற்றிபெற்ற தினகரனுக்கு சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகரில் வெற்றிபெற்ற தினகரனுக்கு சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் நேரில் வாழ்த்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் பெருவாரியான வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதேநேரத்தில் அதிமுகவில் உள்ள பலர் தினகரன் அணிக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதிமுகவில் உள்ள சிலிப்பர் செல்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு எதிராக போர்கொடி தூக்க தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது.
அதிமுக ஆலோசனை கூட்டம்
இதனால் பதறிப்போன முதல்வர் பழனிச்சாமி இன்று சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தினகரன் ஆதரவாளர்கள் நீக்கம்
அப்பொது தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, விபி கலைராஜன், பார்த்திபன் , முத்தையா உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் 6 பேர் நீக்கப்படுதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தினகரனின் ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத், புகழேந்தி வி.பி.கலையராஜன், பாப்புலர் முத்தையா, சி.ஆர்.சரஸ்வதி ஆகிய 5 பேரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
தினகரனுக்கு வாழ்த்து
அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்.கே.நகரில் வெற்றிபெற்ற தினகரனுக்கு சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மூவரும் இணைய வேண்டும்
சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் தற்போது முதல்வர் பழனிசாமி அணியில் உள்ளார். இவர் டிடிவி தினகரனை அவரது பெசன்ட்நகர் வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் இணைய வேண்டும் என என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைவரின் விருப்பம்
மூன்று பேரும் இணைவது கூடிய விரைவில் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தொண்டர்கள் அனைவரும் மூன்று பேரும் இணைய வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர் என்றும கனகராஜ் தெரிவித்தார்.
அதிமுகவில் சலசலப்பு
தினகரன், இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில்தான் கட்சி, ஆட்சி இயங்க வேண்டும் என்றும் கனகராஜ் கூறியுள்ளார். நேற்றுதான் முதல்வர் அணியில் உள்ள வேலூர் எம்பி செங்குட்டுவன் டிடிவி தினகரனை நேரில் சந்தித்தார். இந்நிலையில் கனராஜ் எம்எல்ஏவும் தினகரனை சந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.