தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை விரைவில் அன்புமணி நிரப்புவார் : ராமதாஸ்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை விரைவில் அன்புமணி நிரப்புவார் என்று ராமதாஸ் குறிப்பிட்டு உள்ளார்.
காஞ்சிபுரம் : தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை அன்புமணி நிரப்புவார் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள திருமண மண்டபமொன்றில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் கலந்து கொண்டார்.
அவர் பேசும்போது, தமிழக அரசின் மீது பாமக கூறிய ஊழல் புகார்கள் தற்போது வரிசையாக வெளியாகி வருகிறது. தமிழக அரசின் 25 துறைகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநரிடம் பாமக ஊழல் புகார் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தோம். அப்போது எங்கள் புகாரை கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் புகார் தெரிவித்த கணபதி ஊழல் வழக்கில் கைதாகியுள்ளார். இதன் மூலம் நாங்கள் கூறிய உண்மை வெளிவந்துள்ளது.
ஊழல் புகாரில் சிக்கிய துணைவேந்தர் கணபதியை ஏன் தகுதிநீக்கமோ, பணி இடைநீக்கமோ செய்ய வில்லை. ஊழல் புகாரில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதிக்கும் தற்போதய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. அதனால் நடவடிக்கை எடுக்கவில்லையா? உண்மை வெளிவர பா.ம.க. தொடர்ந்து போராடும் என்று குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு அரசியல் விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள 5.96 கோடி வாக்காளர்களில் பெண்களே அதிகம் உள்ளனர். அவர்களின் மூலமே அரசியல் மாற்றம் ஏற்படும்.
அதற்கு நமது கொள்கைகளை வீடுவீடாக சென்று பெண்களிடம் எடுத்து கூறி அவர்களை பாமகவிற்கு ஓட்டுப்போட வைக்க வேண்டும். இனி எந்த கூட்டமாக இருந்தாலும் கட்சி நிர்வாகிகள் தங்கள் மனைவியுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பெண்களுக்கும் அரசியல் தெரியும்.
தமிழகத்தில் தற்போது பெரிய அரசியல் தலைவர்கள் இல்லை. அதனால் மிகப்பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. அதை நிரப்புவதற்கு அன்புமணியை தவிர வேறு யாரும் கிடையாது. விரைவில் அந்த வெற்றிடம் அன்புமணியால் நிரப்பப்படும் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.