தமிழக விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதித்தால் விவசாயிகள் போராட்டம் வெடிக்கும்: அன்புமணி ராமதாஸ்
தமிழக விளை நிலங்களில் எரிவாயுக்குழாய் பதித்தால் விவசாயிகள் போராட்டம் வெடிக்கும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தின் விளைநிலங்களில் எரிவாயுக்குழாய் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு துணை போனால் விவசாயிகள் போராட்டம் வெடிக்கும் என்று அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு எரிவாயுக்குழாய் அமைக்கும் பணி இன்னும் 30 மாதங்களில் முடிவடையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தெரிவித்தார்.
விளைநிலங்கள் வழியாக எரிவாயுக்குழாய் அமைக்கும் இந்த திட்டத்தை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்த்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கண்டிக்கத்தக்க பேச்சு
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடகத்தின் பெங்களூரு மற்றும் மங்களூருக்கு எரிவாயுக் குழாய் பாதை அமைப்பதற்கானத் திட்டம் அடுத்த 30 மாதங்களில் செயல்படுத்தி முடிக்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் கூறியுள்ளார். விவசாயிகளின் நலன்களை பாதிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
ஏன் விளைநிலங்கள் ?
எரிவாயுக் குழாய் பாதை அமைக்கப்படக் கூடாது என்பது விவசாயிகளின் நிலை அல்ல. விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் நெடுஞ்சாலையோரங்களில் இந்த குழாய்களை பதிக்க வேண்டும் என்பது தான் பா.ம.க. மற்றும் விவசாயிகளின் நிலை. கேரளத்திலும், கர்நாடகத்திலும் எரிவாயுக் குழாய் பாதைகள் சாலையோரங்களில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் விளைநிலங்களில் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பதன் நோக்கம் புரியவில்லை.
சாத்தியக்கூறுகள் இருந்தும்....
கொச்சியிலிருந்து சாலையோரமாகவே குழாய்களை புதைக்கலாம் என பல்வேறு தரப்பிலும் யோசனைகள் தெரிவிக்கப்பட்ட பிறகும், அதற்கான சாத்தியங்கள் என்பது குறித்து ஆய்வு கூட செய்யாமல், வேதாளம் மீண்டும், மீண்டும் முருங்கை மரம் ஏறுவதைப்போன்று விளைநிலங்களின் வழியாகத் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு மீண்டும், மீண்டும் கூறுவதை ஏற்க முடியாது. விவசாய நிலங்களில் குழாய் பதிப்பதன் மூலம் விவசாயிகள் தங்கள் வளங்களையும் , நிலங்களையும் இழக்க நேரிடும்.
திட்டத்தை கைவிடவேண்டும்
எதையும் ஆராயாமல் மத்திய அரசின் ஆணைக்கு பணிந்து, விளைநிலங்களில் குழாய்களை பதிக்க தமிழக அரசு துணை போனால் அதற்கு எதிராக விவசாயிகள் மத்தியில் வரலாறு காணாத எழுச்சி உண்டாகி, அது போராட்டமாக வெடிக்கும். அதற்கு வழிவகுக்காமல், விளைநிலங்களின் வழியாக குழாய் பாதைகளை அமைக்கும் திட்டத்தை கை விட்டு, நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் எரிவாயுக் குழாய் பாதையை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என தமிழக அரசு இதை வலியுறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.