கிரீன் சிக்னல் கொடுத்த திமுக... காங்கிரஸிலிருந்து திமுகவுக்கு தாவும் பிரமுகர்கள்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து திமுகவில் இணைய வேண்டும் என விரும்புபவர்கள் தாராளமாக வரலாம் என அக்கட்சியின் தலைமை கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது.
இத்தனை நாட்களாக கூட்டணிக் கட்சி என்பதால் காங்கிரஸ் தலைமைக்கு வருத்தத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, அந்தக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பதில் அளிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் திமுக மீதான பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை நிலைமையை தலைகீழாக மாற்றியுள்ளது.
50 குண்டுவெடிப்புகள்.. ஆயுள் தண்டனை கைதி.. மாயமான 'Dr. Bomb’ குறித்து பகீர் தகவல்
கோஷ்டிப்பூசல்
காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல்களாலும், உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காததாலும் பலரும் அக்கட்சியில் இருந்து வெளியேறுவது தொடர்கதையாகி உள்ளது. அண்மையில் பல மாவட்ட தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
காத்திருப்பு
வடசென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராயபுரம் மனோ உள்ளிட்ட ஒரு சில நிர்வாகிகள் திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இதனால் கோபித்துக்கொள்ளும் என்பதால் அவர்களுக்கு பதில் கொடுக்காமல் ஸ்டாலின் அமைதி காத்து வந்தார்.
காங்.அதிர்ச்சி
இப்போது கூட்டணி விவகாரம் வேறு விதமாக சென்றுகொண்டிருப்பதால், காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணைய விரும்பியவர்களுக்கு ஸ்டாலின் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார். இதனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னணி தலைவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விரைவில்
காங்கிரஸில் இருந்து திமுகவில் இணையும் பிரமுகர்களின் இணைப்பு விழா விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவரம் சுதர்சனம், சேகர்பாபு ஆகியோர் மூலம் ஸ்டாலினை முதலில் சந்திக்கும் நபர் ராயபுரம் மனோவாக தான் இருப்பார் எனக் கூறப்படுகிறது.