எக்ஸாக்ட்லி.. திமுகவில் என்ன நடக்கிறது.. அறிவாலயத்துக்கு வந்த நேரு.. புகைச்சலில் சீனியர்கள்!
சில திமுக சீனியர் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: திமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. இந்த முறை சீனியர்களுக்குள் ஒரு சில முனுமுனுப்புகள் கிளம்பியுள்ளன. கே.என். நேருவுக்கு தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பை கொடுத்ததில் சில சீனியர்களுக்கு வருத்தம் போல.
திமுக என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்ட மிகப் பெரிய இயக்கம். தமிழகத்தின் இதர கட்சிகளைப் போல இல்லாமல் அடி மட்ட அளவிலிருந்து மேல் மட்டம் வரை படு ஸ்டிராங்கானது திமுக. இதனால்தான் பல புயல்கள் அடித்தும் கூட இந்தக் கட்சி மட்டும் அப்படியே இருக்கிறது.
இடை இடையே வரும் பூசல்களையும் கட்சித் தலைமை சமயோஜிதமாக சமாளித்து விடுவதால் பெரிய அளவில் இதுவரை திமுகவில் புகைச்சல் வந்தது இல்லை. வந்தாலும் கூட அதை திறம்பட சமாளித்த வரலாறும் திமுகவுக்கு மட்டுமே உண்டு.
மாற்றங்கள்
வருகிற சட்டசபைத் தேர்தலுக்காக திமுக மும்முரமாக தயாராகி வருகிறது. புதிய புதிய மாற்றங்களுக்கு கட்சி தயாராகிக் கொண்டிருக்கிறது. மேல் மட்ட அளவில் பல புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றா செய்யப்படவுள்ளன. வலுவாக உள்ள இளைஞர் அணிக்கு மேலும் உற்சாகம் தரும் வகையில் இளைஞர் அணியினரை மாவட்ட நிர்வாக அளவில் அதிக பிரதிநிதித்துவம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
கேஎன் நேரு
இதன் ஒரு கட்டமாகவே மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், திருச்சி திமுகவை இரும்புக் கோட்டையாக வைத்துள்ளவருமான கே. என். நேரு கட்சியின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார். அடுத்து இளைஞர் அணியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான அன்பில் மகேஷ் எம்எல்ஏ திருச்சியில் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என்று பேச்சு அடிபடுகிறது.
பெரிய பொறுப்பு
திமுக தலைமை நிலையச் செயலாளர் பதவி என்பது சாதாரணமானதல்ல. மிகப் பெரிய பொறுப்பு. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த கட்சிக்கும் ஹைகோர்ட் போல. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இங்குதான் வர வேண்டும். தலைமை நிலையச் செயலாளர்தான் அத்தனை விவகாரத்தையும் பார்க்க வேண்டும், தீர்த்து வைக்க வேண்டும். துரைமுருகன், டி.ஆர். பாலு போன்ற சூப்பர் சீனியர்கள் இருந்த பதவி இது.
தலைமை செயலாளர்
இந்த நிலையில் துரைமுருகன் பொருளாளர் ஆனார். டி.ஆர். பாலுவும் இப்போது முக்கியப் பதவிகளில் வகிப்பதால் பிசியாகி விட்டார். எனவே அவரிடம் இருந்த தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பை கே. என்.நேருவிடம் கொடுத்து விட்டனர். இதுதான் புகைச்சலைக் கிளப்பியுள்ளதாம். இந்த போஸ்ட்டுக்கு ஏகப்பட்ட பேர் துண்டு போட்டு வைத்திருந்தனராம். ஆனால் அதைத் தாண்டி நேருவிடம் கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். காரணம், நேருவை சென்னையில் வைத்துக் கொண்டால் கட்சிக்கு நிறைய உதவியாக இருக்கும் என்பதால்.
மூத்த தலைவர்கள்
இருப்பினும் சில மூத்த தலைவர்கள் அதிருப்தி காட்டி வருகின்றனராம். அதிலும் ஒரு சூப்பர் சீனியர்தான் ரொம்ப கோபமாக இருக்கிறாராம். நேருவுக்கு இந்தப் பதவியைத் தருவதில் சுத்தமாக அவருக்கு உடன்பாடு இல்லையாம். ஆனால் கட்சித் தலைமை தனது முடிவில் உறுதியாகி இருந்து விட்டதால் அவர் அப்செட்டாகி விட்டாராம்.
முணுமுணுப்பு
அதேபோல, சில மூத்த தலைவர்கள் முணுமுணுப்புடன் இருப்பதால் நேருவும் கூட அப்செட்டாக இருக்கிறாராம். அதேசமயம், தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வதில் அவர் முனைப்புடன் இருக்கிறார். எடுத்த எடுப்பிலேயே தலைமையிடம் போய் புகாருடன் நிற்க அவர் விரும்பவில்லையாம். கொடுத்த வேலையில் முதலில் கவனம் செலுத்துவோம். பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக இருக்கிறாராம்.
கில்லாடி
கே.என்.நேரு எப்போதுமே தனக்குக் கொடுக்கப்படும் வேலையை சிறப்பாகவும், சீரியஸாகவும் செய்து முடிப்பதில் கில்லாடி. திமுக தலைவர் கருணாநிதியிடம் அந்த வகையில் பலமுறை பாராட்டும் பெற்றவர். அந்த வகையில் இந்தப் பதவியிலும் அவர் கெட்டிக்காரராக செயல்படுவார், அதிருப்தியில் உள்ளவர்களையும் தன் பக்கம் ஈர்ப்பார் என்று சொல்லப்படுகிறது.