ரஜினியிடம் தாவ தயாராகும் 4 அமைச்சர்கள்.. கொங்கு ஈஸ்வரன் சொன்னது நடந்துருமோ.. பரபரக்கும் அதிமுக!
ரஜினியிடம் தாவ 4 அதிமுக அமைச்சர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: நிஜமாக நடக்கும் வரை எல்லாமே வதந்தியாகவேதான் எடுத்து கொள்ள முடியும். அந்த வகையில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும் வரை அவர் அரசியலுக்கு வரப் போவதையும் கூட வதந்தியாகவே கருத வேண்டும். இந்த நிலையில் இன்னும் வராத அந்தக் கட்சிக்கு தாவ நான்கு அமைச்சர்கள் தயாராக இருப்பதாக ஒரு வதந்தி கிளம்பியுள்ளது.
இது உண்மையா... அவர்கள் யார் என்பதெல்லாம் சரியாக தெரியவில்லை. ஆனால் ரஜினிக்காக பல வேலைகளை ரகசியமாக பலர் செய்து கொண்டிருப்பது மட்டும் உறுதியாகி வருகிறது. இத்தனைக்கும் அவர் எப்ப வருவார், எப்படி வருவார், வருவாரா மாட்டாரா, என்றெல்லாம் தெளிவாக தெரியவில்லை.
ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும்போது அவருக்கு ஒரு வலி கூட தெரியாமல் படு சொகுசாக பாதை அமைத்துத் தர படை பட்டாளமே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறதாம் (காமராஜர், கக்கனெல்லாம் உங்க கண்ணுக்கு முன்னாடி வந்து போனா.. நீங்க ரஜினி அரசியலுக்கு பொருந்த மாட்டீங்க சார்)
டாக்டர் ராமதாஸ்
அதாவது முதலில் ஜாதி ரீதியான ஆதரவுகளை பலப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இது பழைய கதைதான். ஏரியாவுக்கு ஏரியா இங்கு ஜாதிதானே பெருசாக பார்க்கப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் வட தமிழகத்திற்கு டாக்டர் ராமதாஸ் என்று ஃபிக்ஸ் செய்து வைத்துள்ளனர். அதே போல முக்குலத்தோர் வாக்குகளுக்கும் ஒரு புள்ளி வைத்துள்ளனராம். அது யார் என்பது தெளிவாக இதுவரை தெரியவில்லை.
பிரதான கட்சிகள்
அதேபோல தென் மாவட்டங்களில் பிரதானமாக உள்ள மேலும் சில ஜாதியினரை வளைக்கும் வகையில் அந்த சமூக பெரும் புள்ளிகளும் திரட்டப்பட்டுக் கொண்டுள்ளனராம். சிலரை முடிவு செய்து விட்டதாகவும் சொல்கிறார்கள். இது ஜாதி ரீதியான ஆதரவு வட்டம். இதைத் தவிர்த்து முக்கியக் கட்சிகளிலிருந்து பல புள்ளிகளை இழுக்கும் முயற்சிகளும் தற்போது சூடு பிடித்துள்ளனவாம்.
கொங்கு மண்டலம்
குறிப்பாக அதிமுக, திமுகவைத்தான் அதிகம் குறி வைத்திருப்பதாக சொல்கிறார்கள். அதிலும் அதிமுகவினால்தான் பலருக்கும் வலை வீசப்பட்டுள்ளதாம். அந்த வலையில் நான்கு அமைச்சர்களும் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. அது யார் என்ற விவரத்தை ரகசியமாக வைத்துள்ளனராம். அவர்களில் 2 பேர் தென் மாவட்டம் என்று மட்டும் பலமாக பேசப்படுகிறது. அதில் ஒருவரை மக்களே கூட எளிதாக கண்டுபிடித்து விட முடியும். இன்னொருவர் தாவி வரும்போதுதான் தெரிய வரும்.
தேர்தல்
அதேபோல சில எம்பிக்களுக்கும் வலை வீசப்பட்டுள்ளதாம். அதாவது அதிமுக ராஜ்யசபா எம்பிக்களுக்கு. அதில் எத்தனை பேர் தேருவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ரஜினி கட்சி ஆரம்பித்தால், அதன் பிறகு அவர்கள் வந்து ஒன்று கலப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் முடிந்தவரை வலுவானவர்களையே வலை வீசி இழுத்துக் கொண்டுள்ளனராம். சிலர் உடனே ரெடி என்று சொல்கிறார்களாம்.. சிலர் தேர்தல் வரும்போது பார்க்கலாம் என்று கூறி துண்டு மட்டும் போட்டு வைத்துள்ளனராம்.
ஈஸ்வரன்
கொங்கு மண்டல ஈஸ்வரன் இதைதான் ஒரு அறிக்கையில சொல்லியிருந்தாரு.. அதாவது சில அமைச்சர்களுக்கு ரஜினிகாந்த் கூட சேர ஆசையா இருக்கு போல என்று அவர் குட்டியிருந்தார். அதற்கு யாருமே மறுப்பு சொல்லவில்லை. குறிப்பாக எந்த அமைச்சரும் மறுப்பு சொல்லவில்லை. அதிமுக தலைமையும் கூட இதை மறுக்கவில்லை. எனவே இந்த நான்கு அமைச்சர்கள் மேட்டர் உண்மையா இருக்குமா என்ற சந்தேகம் கூட எழுகிறது. ஆனால் அவ்வளவு சீக்கிரம் அவர்கள் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை விட்டுப் போய் விடுவார்களா என்றும் எண்ணத் தோன்றுகிறது.
இரட்டை இலை
சில முக்கிய அமைச்சர்களுக்கும் முதல்வருக்கும் சமீப காலமாக லடாய் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள சிலருக்கு. இப்படி ஆங்காங்கு சில அதிருப்திகள் இருக்கலாம். அவர்கள் ரஜினி பக்கம் போவார்களா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. இரட்டை இலை இருக்கும் வரை.. அதிமுக தைரியமாக ரஜினி உள்ளிட்டவர்களுடன் மோதிப் பார்க்கலாம்.. ஆனால் அவர்களை அவ்வளவு சீக்கிரம் சுதந்திரமாக விட்டு வைக்குமா டெல்லி என்பதுதான் இங்கு எழும் மிகப் பெரிய கேள்வி.
மாவட்ட செயலாளர்கள்
ரஜினி தரப்புக்காக இப்படி ஒரு இழுவை நடந்து கொண்டிருப்பதை திமுகவும் கவனிக்காமல் இல்லை. அதுவும் ரகசியமாக பார்த்துக் கொண்டுதான் உள்ளதாம். மறைமுகமாக நடக்கும் வேலைகளை திமுகவும் உன்னிப்பாக கவனிக்கிறது. அதை அழகாக டேக்கிள் செய்யும் வகையில் தான் சமீபத்தில் சில மாவட்ட செயலாளர்களை தூக்கி அடித்தது திமுக. சேலம், கோவை நிர்வாகிகள் மாற்றம்தான் இது.. அது முக்கியத்துவம் பெறுகிறது.
அடையாளம்
அதெல்லாம் சரி.. நமக்கு ஒரு சந்தேகம்.. இப்படி பல கட்சிகள், ஜாதிக் கட்சிகள் இவர்களை வைத்துத்தான் ரஜினியால் வெற்றி பெற முடியுமா... அவரது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும், செல்வாக்கும் மக்கள் மத்தியில் அவருக்கு தனித்து வெற்றி தேடித் தராதா.. இத்தனை பேரும் அவரிடம் வந்தால் அவருக்கான தனித்துவமான அடையாளம்தான் என்ன என்ற அப்பாவித்தனமான கேள்விகள் நமக்கு எழுகிறது.. !
பார்க்கலாம்.. மேற்கண்ட தகவல்கள் எல்லாம் உண்மையாகுமா அல்லது ரஜினி படு வித்தியாசமாக அரசியல் களத்தில் குதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.