எச்.ராஜாவுக்கு செக் வெக்கும் காங்கிரஸ்.. கார்த்தி சிதம்பரம் தமிழக தலைவராவாரா.. எகிறும் எதிர்பார்ப்பு
தமிழக காங்கிரஸ் தலைமை மாறுகிறதா?
சென்னை: அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரம் என்ற தகவல் பரபரக்கிறது.. இது உண்மையா? அல்லது வதந்தியா என உறுதியாக தெரியவில்லை.. ஆனால் மிகுந்த எதிர்பார்ப்பு மட்டும் ஏற்பட்டுள்ளது.. அதேபோல, கார்த்தி சிதம்பரம் என்றால் டென்ஷன் ஆகிவிடும் எச்.ராஜா உள்ளிட்டோர் இதை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்தே எழுந்துள்ளது.
கோஷ்டி பூசலுக்கு பெயர் போனது காங்கிரஸ் கட்சி.. கட்டி உருள்வதும், ரோட்டில் புரளுவதும், அடிதடி குடுமி சண்டையும், உள்ளடி வேலைகள் ஏராளமாக புழங்குவதும் காங்கிரஸ் கட்சிதான்.
இந்திரா காந்தி காலத்தில் இருந்தே இந்த கோஷ்டி சமாச்சாரத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.. ஆளுக்கு ஒரு கோஷ்டியை வைத்து கொண்டு விவகாரம் செய்து வருகிறார்கள்... ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், டக்குனு டெல்லிக்கு பறந்து விடுவார்கள்.. தங்களுக்கு நெருக்கமான தலைவர்களிடம் உட்கார்ந்து பேசி காரியத்தையோ, பிரச்சனையையோ சரி செய்து கொண்டு வருவார்கள்.. பலநேரம் சீட் விவகாரங்களில்கூட இதுதான் நடக்கும். இது எல்லாவற்றிற்கும் மேலாக வாரிசு அரசியலும் திராவிட கட்சிகளுக்கு இணையாக உள்ளது.
ப.சிதம்பரம்
இந்நிலையில்தான் கார்த்தி சிதம்பரத்தின் பெயர் தமிழக காங்கிரஸ் தலைமைக்கு அடிபடுகிறது.. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன...கேஎஸ் அழகிரி ஒரு தீவிரமான ப.சிதம்பரம் ஆதரவாளர்.. இவரை மாநில தலைவராக கொண்டு வர ப.சி. அன்று பெரும் முயற்சி எடுத்தது அனைவரும் அறிந்ததுதான்.. ஆனால் இன்று நிலைமையே தலைகீழ் என்கிறார்கள்.. அழகிரி தரப்பை ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
விசாரணை
இப்போது ப.சிதம்பரம் ஆகட்டும், கார்த்தி ஆகட்டும்.. ஏகப்பட்ட நெருக்கடியில் உள்ளனர்.. இன்னும் வழக்கு முடியவில்லை.. சிபிஐ முதல் விசாரணை, கைது நடவடிக்கை, வழக்குகள் என நிலுவையில் உள்ளன.. மத்திய அரசும் இவர்களை இன்னும் விரட்டி கொண்டே இருக்கிறதே தவிர, இன்னும் விட்டபாடில்லை.. சோனியா குடும்பத்தைவிட ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதே மத்திய அரசின் மொத்த அழுத்தமும் விழுந்துள்ளது.
தலைவர் பதவி
இதிலிருந்து ப.சி.குடும்பம் வெளிவருவது லேசுபட்ட காரியமாக தெரியவில்லை.. இதே சமயம் தமிழகத்திலும் போதுமான செல்வாக்கு, ஆதரவு இல்லை என்றே கூறப்படுகிறது. வழக்கு முடிவு எப்படி வேண்டுமானாலும் முடியலாம் என்பதையும் அவர்கள் யோசிக்காமல் இல்லை.. இந்த சமயத்தில் வலுவான ஒரு ஆதரவை, உறுதியான பிடிப்பை ஏற்படுத்தி கொள்ளதான் சிதம்பரம் தரப்பு முயல்வதாக தெரிகிறது. அதனால்தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஆதரவாளர்களுக்கு இந்த முறை பரிந்துரைக்காமல், கார்த்திக்கு பரிந்துரைக்க முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
கண்டன கூட்டம்
இப்படி ஒரு பேச்சு அடிபட இன்னொரு காரணம், தமிழகத்தில் இடைத்தேர்தல் உட்பட சந்தித்த தொடர் தோல்விகள் என்கிறார்கள்.. மற்றொரு பக்கம், கோஷ்டி மோதல் குறித்து அழகிரி பகிரங்கமாகவே கருத்து சொல்லிவிட்டார் என்றும் சொல்கிறார்கள். இது எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த 15-ந் தேதி மோடி அரசின் குடியுரிமை சட்ட திருத்தம், பட்ஜெட் போன்றவற்றை கண்டித்து, தேவகோட்டையில் கண்டன கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கார்த்த் சிதம்பரம்
மாநில அளவிலான கூட்டத்திற்கு மாநிலத் தலைவர்தான் தலைமை ஏற்பது வழக்கம். ஆனால் ப.சி.யும் கார்த்தி சிதம்பரமும் பங்கேற்கும் இந்தக் கூட்டத்திற்கு அழகிரியை அழைக்கவில்லையாம்.. இந்தக் கூட்டத்தை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் நடத்திவிட்டது என்பதால் அழகிரி தரப்பு கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆதரவாளர்கள்
இப்படி அழகிரி - ப.சிதம்பரம் தரப்பு இடையே ஏகப்பட்ட நெருடல்கள் இருந்தாலும் எது உண்மையான காரணம்? எதற்காக தலைமை பெயரில் கார்த்தி பெயர் அடிபட்டு வருகிறது? அல்லது அவரது ஆதரவாளர்களே கிளப்பி விடும் புது தகவலா இது? என்றெல்லாம் உறுதியாக தெரியவில்லை. ஆனால் டெல்லி தேர்தல் முடிவு நாளன்று "இளைஞர்களின் பங்கு குறைவாக இருக்கிறது, இன்னும் இறங்கி வேலை செய்ய வேண்டும்" என்று குஷ்பு சொன்னதை இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.
எச்.ராஜா
இன்னொரு பக்கம், ப.சிதம்பரம், கார்த்தியையும் ட்வீட்களை போட்டே அலறவிடுவார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.. அந்த வகையில் கார்த்தி காங். மாநில தலைவராகிவிட்டால், எச்.ராஜா போன்ற தலைவர்களை எப்படி எதிர்கொள்வார்? கட்சிக்குள்ளேயே பெருகிக் கிடக்கும் கோஷ்டி பூசல்களை எப்படி சமாளிப்பார்? தன் மீதுள்ள வழக்குகளை தாண்டி எப்படி மாநில பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்துவார் என்ற எதிர்பார்ப்புகளும் நமக்கு ஏற்பட்டுள்ளன.