தென் சென்னையில் செயின் பறிப்பு நடப்பது டாப்... லிஸ்ட் வெளியிட்ட போலீஸ்
சென்னையில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்கள் எங்கு அதிகமாக நிகழ்ந்துள்ளது என்ற புள்ளிவிவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: தென் சென்னை பகுதியில் அதிகளவிலான செயின் பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதியில் 99 நகை பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஜெயலலிதா கடந்த 2011 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற உடன், நகைப்பறிப்பு கொள்ளையர்கள் ஆந்திராவிற்கு தப்பி ஓடிவிட்டனர் என்று கூறினார். சட்டசபையில் அதற்கு மேஜையை தட்டி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆரவாரம் செய்தனர். ஆனால் நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகின.
ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் ஒபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி காலத்தில் சென்னையில் கடந்த 11 மாதங்களில் 570 பேரிடம் தங்க நகைகள் பறிக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்துள்ளன.
நகை பறிப்பு சம்பவங்கள்
தென் சென்னை பகுதியில் அதிகளவிலான செயின் பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதியில் 99 நகை பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக அண்ணாநகரில் 73 வழக்குகள், அம்பத்தூரில் 72 நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
நகை பறிப்பு கொள்ளையர்கள்
மாதவரத்தில் 54, புளியந்தோப்பில் 53, தியாகராய நகரில் 52, அடையாறில் 48, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூரில் தலா 36 நகை பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.
429 வழக்குகள்
மொத்தம் 570 பேரிடம் 1 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிக்கப்பட்டுள்ள. 570 வழக்குகளில் 429 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடமிருந்து 1 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை கமிஷனர்
செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் வழிப்பறி சட்டப்பிரிவின் கீழ் மட்டும் வழக்குப்பதிவு செய்யாமல் இந்திய தண்டனை சட்டம் 390 சட்டப்பிவின் கீழ் திருட்டு என்ற பிரிவிலும் குற்றவாளிகளை கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
செயின்பறிப்பு குற்றவாளிகள் கைது
அதன்படி கடந்த 3 மாதத்தில் 34 வழக்குகள் 390 சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை கடந்த ஒரு வருடத்தில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டதாக 67 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.