நடிகர் சங்க கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: சரத்குமாருக்கு கார்த்தி எச்சரிக்கை
சென்னை: தென் இந்திய நடிகர் சங்க கணக்குகளை உடனே ஒப்படைக்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் கார்த்தி எச்சரித்துள்ளார்.
தென் இந்திய நடிகர் சங்கத்தின் 3வது செயற்குழுக் கூட்டத்துக்குப் பின், நடிகர் சங்க நிர்வாகிகள், அதன் தலைவர் நாசர் தலைமையில் செய்தியாளர்களை சந்தித்து இன்று மாலை பேட்டியளித்தனர்.
முன்னாள் நிர்வாகிகள் முழுமையான கணக்கு காட்டவில்லை என்றும் கணக்குகளை ஒப்படைக்கக் கோரி பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் நடிகர் கார்த்தி புகார் தெரிவித்தார்.
2013-14; 2014-15 ஆம் ஆண்டு கணக்குகளை முன்னாள் தலைவர் சரத்குமார் இன்னும் ஒப்படைக்கவில்லை. சங்க கணக்குகளை ஒப்படைக்காததால்தான் பொதுக்குழுவை கூட்டுவதில் சிக்கல் நிலவி வருகிறது.
தேர்தல் முடிந்து, 15 நாட்களில் கணக்கு கொடுப்பதாக கூறியிருந்தனர். ஆனால், இன்னும் கணக்கு காட்டவில்லை. நடிகர் சங்க கணக்குகளை உடனே ஒப்படைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கார்த்தி தெரிவித்தார்.
நடிகர் சங்க கட்டுமானப்பணி விரைவில் தொடங்கும் என்று நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார்.
எஸ்.பி.எஸ் சினிமா ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவு இறுதி செய்யப்பட்டுவிட்டது. நட்சத்திர கலைவிழா நடத்தாமல் நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டப்படும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.ஐ. சினிமாஸுடன் போடப்பட்ட ஒப்பந்தம் முழுமையாக ரத்தாகவில்லை. நடிகர் சங்க தேர்தலுக்குப் பிறகு சரத்குமார் வெளியிட்ட எஸ்.பி.ஐ. சினிமாஸுடனான ரத்து ஒப்பந்தம் பொய்யானது. தற்போது தான் அந்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்திருக்கிறோம் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.