ஜெ. பூரண நலம்பெற வேண்டி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சார்பில் கூட்டு பிரார்த்தனை
ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் பிரார்த்தனையில் ஈடுப்டடனர்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சர்வ மத பிரார்த்தனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் டெல்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனை டாக்டர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஆகியோர் நேரில் வந்து முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையை பரிசோதித்து தேவையான சிகிச்சையை அளித்தார்கள்.
இந்த சிகிச்சையின் பலனாக முதல்வர் உடல்நிலையில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில் சிங்கப்பூரிலிருந்து பிரியோதெரபி நிபுணர்கள் வந்து பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர். தொடர் சிகிச்சையில் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் யாகங்கள், ஹோமங்கள், அபிஷேகம், விசேஷ பூஜைகள், தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு பூசணிக்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபடுதல், விளக்கு பூஜை, கோபூஜை, பால்குட ஊர்வலங்கள் என ஏராளமான பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சர்வ மத பிரார்த்தனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் பெப்சி சிவா, நடிகர்கள் ராதாரவி, ரித்திஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.