டோல்கேட் கட்டண உயர்வுக்கு எதிராக தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கத்தினர் விரைவில் போராட்டம்
டோல்கேட் கட்டண உயர்வை எதிர்த்து விரைவில் தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்த உள்ளனர்.
சென்னை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுங்க கட்டணஉயர்வை எதிர்த்தும், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வரக் கோரியும் விரைவில் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 41 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளின் (டோல்கேட்) கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் 327 சுங்க சாவடிகள் உள்ளன. இதில் 117 சுங்கச்சாவடிகள் தென் மாநிலங்களில் உள்ளன. அவற்றில் 41 தமிழகத்தில் உள்ளன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சுங்க சாவடிகளின் மூலம் தேவையான பணம் வசூல் செய்த பிறகும் மத்திய அரசு கட்டணம் வசூலிப்பது நிறுத்தவில்லை. இதில் கொள்ளையடிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு துணை போகிறது.
ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடி சாலை மூலம் சுங்க வரி வசூல் செய்யப்படுகிறது. இது தவிர்த்து லாரி, பஸ் போன்ற வாகனங்களுக்கு சாலை வரியும் வசூலிக்கப்படுகிறது. மேலும், எரிபொருட்களின் மீதும் வரி விதிக்கப்படுகிறது. இதனால் வாகன உரிமையாளர்களுக்கு அதிக இழப்பு ஏற்பட்டு வருகிறது.
ஒரு நாளைக்கு 300 கி.மீ., மேல் இயக்கமுடியாதபடி லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சுங்கவரியை ஆண்டுக்கு ஒரு முறை கொடுப்பதாகவும், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரக்கோரியும் பல முறை வலியுறுத்தியும் அதற்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
இதுவரை நாங்கள் அமைதியாக இருந்துவிட்டோம். இனியும் இந்த நிலை தொடர்ந்தால், தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும், விரைவில் பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் கூட்டத்தில் பேசி அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்கவுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.