அங்கவை, சங்கவை, பொங்கவை- இவையும் இனவெறிதான், நாம் திருந்துவது எப்போது?
இனவெறி தொடர்பாக கருத்து கூறிய தருண் விஜய்யை குறைகூறுவதற்கு முன்னர் தென்னிந்திய சினிமாவும், அதன் மக்களும் திருந்த வேண்டும்.
சென்னை: இனவெறியை உண்டாக்கும் வகையில் கருத்து தெரிவித்த தருண் விஜய்யை கண்டனம் தெரிவிப்பதற்கு முன்னர் தென்னிந்திய சினிமாவும், அதன் மக்களும் திருந்த வேண்டும்.
டெல்லியில் அண்மையில் ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு முன்னாள் எம்பி. தருண் விஜய் அளித்த பேட்டியின்போது தென்னிந்தியர்களை கருப்பின மக்கள் என்று கூறியதால் இனவெறியை தூண்டியதாக அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதற்கு தாம் தூம் என்று கொதிக்கும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் சிவாஜி திரைப்படத்தில் வரும் அங்கவை, சங்கவை காமெடிக்கு சிரிக்காமல் , ரசிக்காமல் இருந்திருப்பரா? அதிலும் விவேக்கின் ரொம்ப பொங்கவைச்சுட்டீங்க என்ற கருத்துக்கு சிரித்து சிரித்து வயிற்றை புண்ணாக்கியவர்கள் எத்தனை பேர்?
பழகுவோம்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் ஷ்ரேயா மீது ரஜினிக்கு காதல் வரும். அதை புரபோஸ் செய்ய அவரது வீட்டுக்கு சென்று ஷ்ரேயாவின் தந்தை ராஜாவிடம் பெண் கேட்பார். அதற்கு ராஜா, முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்கு பெண் கொடுக்க மாட்டேன் என்பர்.
மறுப்பு
அதற்காக ரஜினி தனது தாய், தந்தை, மாமா விவேக்குடன் அந்த குடும்பத்தாருடன் பழக வருவர். அப்போது ரஜினி, முன் பின் தெரியாதவருக்கு பொண்ணு குடுக்கமாட்டேனு சொன்னீங்க, அதான் பழக வந்தோம் என்பார். அதற்கு ராஜா முகத்தில் அடித்தது போல் பதில் சொல்லிவிட்டு கதவை சாத்தி கொள்வார்.
அங்கவை... பொங்கவை...
அப்போது அங்கு வரும் சாலமன் பாப்பையாவிடம் ரஜினி நடந்ததை கூறுவார். அதற்கு பாப்பையாவோ என்னிடம் இரு பெண்கள் உள்ளனர். இவர் அங்கவை, அவர் சங்கவை என்று கருப்பாக இரு பெண்களை காண்பிப்பார். அதற்கு விவேக் ரொம்ப பொங்கவைச்சுட்டீங்க என்று காமெடி செய்வார்.
நல்ல கலர்
உண்மையிலேயே கண்ணுக்கு லட்சணமாக இருக்கும் அந்த இரு பெண்களுக்கும் காமெடி செய்வதற்காகவே கருப்பாக மேக்கப் போட்டு சீனை எடுத்திருப்பர் நடிகர் விவேக் அன்ட் கோ. அவர்களும் தென்னிந்தியர்கள்தானே காமெடிக்கு எவ்வளவோ உள்ள நிலையில் ஒருவரின் நிறத்தை கேலி செய்வது மட்டும் இனவெறி அல்லாமல் வேறென்ன?
தமிழகமே எரியும்
ஸ்ரேயா பணியாற்று்ம மியூசிகல் கடைக்கு விவேக்குடன் ரஜினி சென்று திருமணம் குறித்து பேசுவார். அப்போதும் ஸ்ரேயா அவரது கையை நீட்டி கலர் குறித்து பேசுவார்.
பொங்க வைச்சுட்டீங்கன்னு சொல்லும் விவேக் மிகவும் சாமத்தியமாக, யாரை பார்த்து கருப்புன்னு சொல்றே, அவர கருப்புன்னு சொன்ன தமிழ்நாடே பத்திகிட்டு எரியும் என்று சொல்லிவிட்டு கருப்புகளை பட்டியலிடுவார்.
மெசேஜ் இல்லை
விவேக்கின் காமெடிகள் நாட்டுக்கு மெசேஜ் சொல்வதாகவே இருந்தன. ஆனால் இந்த படத்தில் கருப்பாக இருக்கும் ரஜினிக்கு ஃபேர் அன்ட் லவ்லி போடுவது போன்ற காமெடிகள் கருப்பாக இருப்பர்களின் மனதை நோகடிக்கும் செயல்கள் அல்லாமல் வேறு என்ன? இன்றும் கிராமம், நகரப்புறங்களில் கருப்பாக இருப்பவர்களுக்கு கருப்பன், கருப்பி என்று அழைக்கும் நடைமுறை உள்ளது. தென்னிந்தியர்களான நாம் நமது இனத்தினரை கிண்டல் செய்யலாம். ஆனால் தருண் விஜய் போன்ற வடமாநிலத்தவர்கள் சொன்னால் மட்டும் கோபம் பொத்துக் கொண்டு வருவது நியாயமா?