விவசாயக் கடன்களை உடனே ரத்து செய்ய எடப்பாடியிடம் அய்யாகண்ணு நேரில் வலியுறுத்தல்!
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாகண்ணு வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்து அய்யாகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை கண்டுள்ளதால் விவசாயக் கடன் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 40 நாட்களாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்தித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அய்யாகண்ணு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
வடஇந்திய விவசாயிகளையும் ஒருங்கிணைத்து வருகிற 21ம் தேதி டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும்அய்யாகண்ணு கூறினார். அடுத்த கட்டமாக விவசாயிகளை நிர்கதியாக விட்ட மத்திய அரசை சாடும் வகையில் கோவணம் கட்டும் போராட்டமோ அல்லது, நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திலோ ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.