திமுக தோல்விக்கு ‘அழகிரி விளைவு’ காரணமா? ஒரு அலசல்
மதுரை: திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டதாலேயே லோக்சபா தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது என்று அழகிரியின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
அழகிரி இருந்தபோதும் இதுபோன்றதொரு தோல்வி திமுகவிற்கு கிடைத்துள்ளது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதியே தெரிவித்துள்ளார்.
அழகிரி விளைவுதான் இப்படியொரு மோசமான தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது என்று சொந்தம் கொண்டாடும் அவரது ஆதரவாளர்களுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கிறது ஆய்வு முடிவு ஒன்று.
உள்ளடி வேலை
லோக்சபா தேர்தலில் நேரடியாக பங்கெடுக்காத மு.க. அழகிரி, திமுகவிற்கு எதிராகஉள்ளடி வேலை பார்க்குமாறு தன் ஆதரவாளர்களுக்கு வெளிப் படையாகவே உத்தரவிட்டார்.
4 வது இடத்திற்கு போகணும்
மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தொகுதிகளில் காது குத்து, திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், அந்தந்தத் தொகுதி திமுக வேட்பாளர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்களை 4-வது இடத்துக்குத் தள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மதுரையில் தேமுதிகவிற்கு
அழகிரி ஆதரவாளர்கள் பாஜக அணிக்குத் தீவிரமாக வேலை பார்த்த தொகுதி என்றால் மதுரைதான். திமுக வேட்டி கட்டிக் கொண்டு துணிச்சலாக முரசுக்கு ஓட்டு கேட்டார்கள். அழகிரியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் சிவமுத்துக்குமாரோ டெபாசிட் இழந்தார். ஆனால் திமுக 2-வது இடத்தைப் பிடித்தது.
தேனி பொன் முத்துராமலிங்கம்
அழகிரியால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் தேனி வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம்தான். அழகிரியின் ஆதரவு பெற்ற அழகுசுந்தரம் (மதிமுக) இங்கு 3-வது இடத்தையே பிடித்தார். ஆனால் பொன். முத்துராமலிங்கம் 2-வது இடத்தைத் தக்கவைத்தார்.
திண்டுக்கல்லில் தடுக்கல்
திண்டுக்கல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியும், பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவருமான முத்துப்பாண்டி 4 ஆயிரம் பேருடன் அழகிரி அணியில் சேர்ந்தார். தேர்தல் நேரத்தில் அவரை வைத்து, வேலை பார்க்கலாம் என்று அழகிரி நினைத்திருக்க, முத்துப்பாண்டியோ கொலை செய்யப்பட்டார். எனவே திமுக எளிதாக 2-வது இடத்தைப் பிடித்தது.
விருதுநகர் ரத்தினவேல்
விருதுநகர் தொகுதியில் அழகிரி ஆதரவாளர்கள் ரொம்பக் குறைவு. அழகிரியின் ஆதரவு பெற்ற வைகோ, 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றாலும் 2-வது இடத்தைத் தக்க வைத்தார். சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிர் கோஷ்டியாக சிலர் இருந்தாலும், அவர்கள் வெளிப்படையாக தேர்தல் வேலை பார்க்கவில்லை. ஆனால், இங்கு திமுக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
ராமநாதபுரம் ரித்தீஷ்
ஜே.கே. ரித்தீஷும், ராம்கோ முன்னாள் சேர்மன் எம்.ஏ. சேக்கும் அழகிரியின் தளபதிகளாக இங்கே கோலோச்சியவர்கள். தேர்தல் நேரத்தில் ரித்தீஷ் அதிமுக பக்கம் போய்விட்டார். எம்.ஏ. சேக்கோ, ஜமாத் கட்டுப்பாட்டை மீற முடியாத சூழ்நிலைக்கு ஆளானார். ஆக, அழகிரி ஆதரவு பெற்ற வேட்பாளர் குப்புராம் 3-வது இடத்துக்குப் போய்விட்டார்.
சிவகங்கையில் ஹெச்.ராஜா
சிவகங்கை தொகுதியில் திமுக 2-வது இடத்தைப் பிடித்து, கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்டது. அழகிரியை வீடு தேடி வந்து புகழ்ந்து தள்ளிய ஹெச். ராஜா டெபாசிட் இழந்ததுதான் மிச்சம். அழகிரியின் விளைவு எதுவும் இங்கே இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தென்காசி கிருஷ்ணசாமி
‘என் மனைவியும் தலித்தான். அவரது உறவினர்களை வைத்து கிருஷ்ணசாமிக்குப் பாடம் புகட்டுவேன்' என்றார் அழகிரி. இந்த தொகுதியில் அழகிரி ஆட்கள் வேலை பார்த்திருந்தால் கண்டிப்பாக மதிமுகவின் சதன் திருமலைக் குமார் 2-வது இடத்தைப் பிடித்திருப்பார் என்கிறார்கள் மதிமுகவினர். ஆனால், அழகிரி எதிர்த்த கிருஷ்ணசாமி 2-வது இடத்தை பிடித்தார்.
திருநெல்வேலியில்
இந்த தொகுதியில் அழகிரியின் தீவிர விசுவாசியான முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உள்பட யாரும் வெளிப்படையாக வேலை பார்க்கவில்லை. ஆனாலும், இங்கும் திமுக 2-வது இடத்தைப் பிடித்துவிட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி தொகுதியில் அழகிரி ஆதரவு பெற்ற வேட்பாளரான ஜோயல் (மதிமுக) 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அழகிரி ஆதரவாளரான ஜெயதுரைகூட, இங்கு திமுகவுக்கு எதிராக வெளிப்படையாக வேலை பார்க்கவில்லை. ஆக, இங்கும் திமுக 2-வது இடத்தைப் பிடித்தது.
கன்னியாகுமரி
அழகிரியிடம் போனில் ஆதரவு கேட்ட பொன். ராதாகிருஷ்ணன் இங்கே வெற்றி பெற்றார். அதே சமயம் அழகிரி கன்னியாகுமரி வந்தபோது, சாலையோரம் நின்று சால்வை போட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 2-வது இடத்தைப் பிடித்தார். ஆனால் திமுக வேட்பாளர் ராஜரத்தினம் டெபாசிட் இழந்தார். இது ஒன்றும் அழகிரியால் நிகழவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மொத்தத்தில் தென்மாவட்டங்களில் திமுக தோற்றுப் போனதற்கு அழகிரி விளைவு என்பது எதுவும் இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.