தென் மாவட்டங்களை குறிவைக்கும் மழை... 4 நாட்களுக்கு பெய்யுமாம்!!
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்ததில் தமிழகத்தின் வடமாவட்டங்களும், தென் மாவட்டங்களும் கதி கலங்கிப் போயுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 18 நாட்கள் உள்ளன. இந்நிலையில், வடமாவட்டங்களில் மழை குறைந்து, தென்மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.
நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொட்டிவரும் கனமழையால் அணைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாலத்தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் பகுதியி்ல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 14ம் தேதி முதல் வரும் 17ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.