மேலே பாருங்க.. தமிழகம், புதுவை முழுவதும் வியாபித்திருக்கும் தென் மேற்குப் பருவ மழை.. செம மழை வரும்!
தென் மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதுமாய் பரவியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தென் மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதுமாய் பரவியுள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஒரு புறம் வெயில் சுட்டெரித்தாலும் பல பகுதிகளில் அவ்வப்போது இடி மின்னலுடன் நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என்றும் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.
பருவமழைக்கு வாய்ப்பு
மேலும் அவர் பேசியதாவது, அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 29ம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் தென் மேற்கு பருவமழைக்கு வாய்ப்புள்ளது.
அரியலூரில் 13 செ.மீ
கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக அரியலூரில் 13 செ.மீ மற்றும் திருவிடைமருதூரில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஒகேனக்கல், தஞ்சாவூர், உளுந்தூர்பேட்டை, சேலம் பகுதியில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது. வால்பாறை, பாபநாசம், செங்கல்பட்டு பகுதிகளில் 2 செ.மீ., மழை பெய்துள்ளது.
முழுவதும் பரவியுள்ளது
தமிழகத்தில் கடந்த 29ம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதுமாக பருவ மழை பரவியுள்ளது. ஆந்திராவில் விரைவில் பருவமழை தொடங்கும்.
மழைக்கு வாய்ப்பு
தற்போது வங்க கடலின் மத்திய பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் , சென்னை நகரில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.