தென்மேற்கு பருவமழை தீவிரம்.. குற்றாலத்தில் சீசன் களை கட்டியது! விவசாய பணிகள் ஜோர்
நெல்லை: குற்றாலம் மற்றும் அதையொட்டியுள்ள நெல்லையின் மேற்கு மாவட்டங்களில் நல்ல சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா மற்றும் உழவு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
குற்றாலத்தில் சீசன் துவங்கினாலும் தொடர்ந்து சாரல் மழை ஏமாற்றி வந்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்து காணப்பட்டது. குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ஐந்தருவி வெண்ணமடை குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.
அருவிகளின் நகரமான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி,உள்ளிட்ட அருவிகளில் ஆனந்த குளியல் நடத்த இந்த சீசன் நாட்களில் சுமார் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
தாமதம்
இங்கு ஆண்டு தோறும் படகு சவாரி நடப்பது வழக்கம். இந்த ஆண்டு சீசன் காலதாமதமாக துவங்கியதாலும், படகு குழாமிற்கு போதிய தண்ணீர் வராததாலும் படகு சவாரி துவக்கப்படாமல் இருந்தது.
தொடங்கியது
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் படகு குழாமிற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. படகு குழாமில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் படகு சவாரி துவக்க திட்டமிடப்பட்டு இன்று இதன் துவக்க விழா நடைபெற்றது.
படகு வகை
இங்கு மொத்தம் 31 படகுகள் உள்ளன. இதில் பெடல் படகு 5, நான்கு இருக்கை படகுகள் 17, நான்கு இருக்கை துடுப்பு படகுகள் 5, தனிநபர் படகுகள் 4 உள்ளன. தனிப் படகு கட்டணமாக 90ரூபாயும், 2 இருக்கை படகிற்கு 115 ரூபாயும், 4 இருக்கை படகிற்கு 140 ரூபாயும், துடுப்பு படகிற்கு 180 ரூபாயும் வசூலிக்கப்படும். இக்கட்டணம் அரை மணி நேரத்திற்கு மட்டுமே. படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு உயிர் காக்கும் உடை (லைப் ஜாக்கெட்) வழங்கப்படும். இதற்கு தனி கட்டணம் கிடையாது.
உழவு பணி
செங்கோட்டை:மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் தென் மேற்கு பருவ மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பிவருகின்றன.இதனால் நெல் சாகுபடி செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்காக அணைகளில் சேகரிக்கப்படுகிறது.
அணைகளில் நீர் அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஜீன் முதல் ஆகஸ்ட் வரை தென் மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்யும். கடந்த நான்கு ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்த நிலையில் இந்தாண்டு ஜூன் 1ம் தேதி முதல் இன்று வரை சீரான இடைவெளியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
எல்லை பகுதிகள்
செங்கோட்டை தாலுகா மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள கடனாநதி, குண்டாறு, அடவி நயினார் கோவில் உள்ளிட்ட 3 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக செங்கோட்டை,கடையநல்லூர்,தென்காசி,குற்றாலம்,வடகரை,பண்பொழி,வல்லம்,குண்டாறு ,புளியாரை,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.