சென்னை வரவேண்டிய 6 தென்மாவட்ட ரயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தம்!
வடதமிழக ரயில் தண்டவாளங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
விழுப்புரம்: சென்னைக்கு இன்று வந்து சேர வேண்டிய 6 தென்மாவட்ட ரயில்கள் விழுப்புரத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சென்னை வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயுள்ளனர்.
வர்தா புயலால் வட தமிழகத்தில் கனமழை பெய்தது. இம்மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ரயில் தண்டவாளங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் வட தமிழகத்தில் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் நிறுத்தப்பட்ட புறநகர் சேவைகள் அனைத்தும் இன்று மீண்டும் இயக்கப்பட்டன.
இதனிடையே நேற்று தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் விழுப்புரத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. மன்னார்குடி, பொதிகை, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையத்திலும், சேது எக்ஸ்பிரஸ் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திலும் நெல்லை எக்ஸ்பிரஸ் பரிக்கல் ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதேபோல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயுள்ளனர். மேலும் ஈரோடு- சென்னை எழும்பூர்; சென்னை எழும்பூர்- ஈரோடு சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்- தின்சுகியா எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை பெரம்பூர் வராமல் ரேணிகுண்டா, குண்டூர் வழியாக இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விருத்தாசலத்தில் வைகை எக்ஸ்பிரஸ்
மதுரையில் இருந்து சென்னை வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு வைகை எக்ஸ்பிரஸில் வந்த 1,500 பேரும் இறக்கிவிடப்பட்டனர். இதையடுத்து பேருந்துகளை பிடித்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதியது.