வர்தாவில் வதைபட்ட வடமாவட்டங்கள்... உள்மாவட்டங்களில் 'சுள்' வெயில்
வர்தா புயலின் தாக்கத்தால் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த வர்தா புயல் திருவள்ளூர் அருகே பழவேற்காட்டில் கரையைக் கடக்கத் துவங்கியது.
22 ஆண்டுகளுக்கு பிறகு மிக சக்திவாய்ந்த புயல் சென்னையை தாக்கியுள்ளது. இந்த புயல் வட வட தமிழகம் - தெற்கு ஆந்திரா இடையே, சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. தொடர்ந்து வீசும் காற்றால் ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுகின்றன. 100 க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
காற்றுடன் கனமழையும் பெய்து வருவதால் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இரவு 7 மணிவரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பலத்த காற்றால் 3000 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் திண்டுக்கல், மதுரை, கரூர், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் புயலின் தாக்கம் கொஞ்சம் கூட இல்லை. கடும் வெப்பமும்,சுள்ளுன்னு வெயில்தான் அடித்து வருகிறது. விவசாயப் பணிகள் நடந்துவரும் வேளையில் மழை இல்லாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிட்டு பெய்து கெடுக்கும் மழை கொஞ்சம் இந்தப் பக்கமும் பெய்யக்கூடாத? என உள்மாவட்ட மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்.