பெஷாவர் தாக்குதல் எதிரொலி - தென்மாவட்ட பள்ளிகளை தீவிரமாக கண்காணிக்கும் போலீசார்
நெல்லை: பாகிஸ்தானில் பள்ளியில் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளை தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் பெஷவார் நகரில் உள்ள ராணுவ பள்ளியில் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தயதில் 132 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானை போனறு இந்தியாவிலும் கல்வி நிறுவனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பு பலப்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. மேலும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஓத்திகையும், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் எவ்வாறு தப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவை அடுத்து தமிழகத்தில் உள்ள பள்ளி கூடங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பள்ளிகள் நடைபெறும் போது போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதிகமான மாணவிகள் பயிலும் பள்ளிகள் முன்பு போலீசாரை தயார் நிலையில் நிறுத்தி கண்காணிக்கவும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் போலீஸ் ரோந்தை தீவிரப்டுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
இது தவிர சந்தேகப்படும் படியாக உள்ள பகுதிகளில் உளவு பிரிவு போலீசாரை பயன்படுத்தவும் இன்டர்நெட் மையங்களை கண்காணிக்கவும் சைபர் கிரைம் போலீசார் உதவியோடு செய்ய தீர்மானிக்கப்பட்டது. சந்தேகப்படும் படியான நபர்களின் செல்போன் உரையாடல்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.