கன்னியாகுமரி - காரைக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்க தென் மாவட்ட மக்கள் கோரிக்கை
நெல்லை: கிழக்கு கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரை ரயில் மூலம் இணைக்கபடவேண்டும் என்று தென்தமிழ்நாடு மக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது.
தென் மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, தொழில்வளர்ச்சியில்லாமை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தென்தமிழகத்தின் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலைவாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை, மும்பை மற்றும் பெங்களுர் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில்பாதைகள் ஆங்கிலேயர் காலத்திலே அமைக்கப்பட்டது ஆகும். இந்தியா சுதந்திரம் கிடைத்தது முதல் குமரி மாவட்டம் தவிர உள்ள தென்மாவட்டங்களில் ஒரு கி.மீ தூரம் கூட புதிதாக ரயில்பாதை வழித்தடம் இதுவரை அமைக்கவில்லை.
குமரி மாவட்டத்தில் திருநெல்வேலி - நாகர்கோவில் 74 கி.மீ புதிய அகல ரயில்பாதை 08-04-1981-ம் தேதியும், கன்னியாகுமரி - திருவனந்தபுரம் 87 கி.மீ புதிய அகல ரயில்பாதை - 15-04-1979 அன்றும் அமைக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இந்த இரண்டு பாதைகளையும் சேர்த்து தென்தமிழக எல்லைக்குள் 1947க்கு பிறகு மொத்தம் 131 கி.மீக்கு மட்டுமே புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு இதுவரை எந்த ஒரு புதிய பாதையும் தென்மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை. ஆங்கிலேயர்கள் அமைத்த மீட்டர் கேஜ்பாதைகளை அகல பாதையாக கூட இது வரை மாற்ற வக்கில்லாமல் மிகக்குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக ஜவ்வு போல ஆண்டுகணக்கில் இழுத்து கொண்டே போகிறது.
தற்போது தென்மாவட்டங்களில்; மதுரை - காரைக்குடி, மதுரை - கோட்டையம், மதுரை - தூத்துக்குடி, மானாமதுரை - தூத்துக்குடி, ராமேஸ்வரம் - தனூஷ்கோடி, கன்னியாகுமரி - காரைக்குடி, ஆளுர் - செட்டிகுளம், திருநெல்வேலி - சங்கரன்கோவில் ஆகிய பாதைகள் மட்டுமே தென் மாவட்டங்களில் 1947 முதல் இதுவரை சர்வே செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யப்பட்டுள்ள சர்வேக்களில் ஒரே ஒரு திட்டமாக மதுரை - தூத்துக்குடி பாதை 2011-12 ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு மிகக்குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மற்ற எந்த ஒரு திட்டமும் செயல்படுத்த அறிவிக்கப்படவில்லை.
கிழக்கு கடற்கரை ரயில் பாதை:
கிழக்கு கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரை ரயில் மூலம் இணைக்கபடவேண்டும் என்று தென்தமிழ்நாடு மக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது. கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் போது இந்த வழி தடத்தில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்துடன் நேரடியாக ரயில் வழி பாதை மூலம் இணைக்கபட்டுவிடும். இதனால் பொருதாளரத்தில் பின்தங்கிய இந்த பகுதியில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். தற்போது கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயிலில் பயணிக்க வேண்டுமானால் நாகர்கோவில்,திருநெல்வேலி வழியாக 136 கி.மீ பயணித்த சுற்றுபாதையில்தான் செல்ல முடியும். கிழக்கு கடற்கரை ரயில்பாதை அமைக்கப்ட்டால் பயணதூரம் 70 கி.மீ மட்டுமே ஆகும்.
குலசேகரம்பட்டிணம் ரயில்பாதை:-
திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் உடன்குடி - கே.பி.என் சந்தைக்கு ஆங்கிலேயர்காலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆங்கிலேயர்கள் தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம், கொற்கை ஆகிய துறைமுகங்களின் வாயிலாக பன்னாட்டு வணிகத்தில் கிழக்கிந்திய கம்பெனியினர் ஈடுபட்டனர். குலசேகரன்பட்டினத்தில் சர்க்கரை ஆலையை துவங்கிய 1914ம் ஆண்டு "பாரி அன் கோ' எனும் நிறுவனம் மூலம் குலசேகரன்பட்டினத்திலிருந்து திசையன்விளைக்கு 16.5 மைல் தூரத்திற்கு ரயில் பாதை அமைத்தனர். அப்பாதையில் 18.07.1915 முதல் பயணிகள் ரயில் ஒன்றும், சரக்கு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. இந்த ரயில் பாதை 1929ம் ஆண்டு திருச்செந்தூர் வரை மேலும் 27 மைல்கள் நீட்டிக்குபட்டது. திசையன்விளையில் இருந்து இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரன்பட்டினம், ஆலந்தலை வழியாக திருச்செந்தூருக்கு தினமும் மூன்று ரயில்களும், திசையன்விளை வாரச் சந்தை நாளான வெள்ளிக்கிழமை அன்று அதிகப்படியாக சிறப்பு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. திசையன்விளைக்கும் திருச்செந்தூருக்கும் இடையிலான பயணக்கட்டணம் 13 அனாவாக இருந்தது. இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக 4.2.1940ல் இந்த ரயில் சேவை முற்றிலும் முடங்கிபோனது. தற்போது இந்த பகுதியில் ரயில்கள் இயக்கப்ட்டதங்கான எந்த அறிகுறியும் இன்றி காணப்படுகிறது.