தீபாவளி: நாகர்கோவில், கரூர், ஈரோடு, கோவைக்கு 12 சிறப்பு ரயில்கள் இயக்கம்- நாளை முன்பதிவு
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிக்கைக்கு ரயில்களில் முன்பதிவு தேதி அறிவிக்கப்படும் நாளில் ஒரு சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் பதிவாகிவிடுகின்றன. இதனால் பண்டிகை காலங்களில் அரசு சிறப்பு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளை நம்பியே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
அதுவும் ஆம்னி பேருந்துகளின் பயண கட்டணக் கொள்ளை குலைநடுங்க வைக்க செய்கின்றன. இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில், கரூர், ஈரோடு, கோவை, திருவனந்தபுரத்துக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் முக்கிய ரயில்களில் கூடுதலாக 70 பெட்டிகள் இணைக்க வாய்ப்புள்ளது என்றும் ஜோரி தெரிவித்துள்ளார்.
புதிய ரயில்கள் விவரம்:
சென்னை எழும்பூர் - நெல்லை (06747) சிறப்பு ரயில் (விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 1-ம் தேதி காலை 10.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 2.30 மணிக்கு நெல்லை போய்ச் சேரும்.
நெல்லை - சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் (06749) சிறப்பு ரயில் (திருச்சி, விருத்தாசலம் வழியாக) நெல்லையில் இருந்து நவம்பர் 4-ம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை வந்து சேரும்.
கோவை - சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06626) கோவையில் இருந்து நவம்பர் 1-ந் தேதி மற்றும் 4-ந் தேதி அதிகாலை 12.30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் காலை 8.30 மணிக்கு சென்னை வந்துசேரும்.
சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில் (06625) சென்னையில் இருந்து நவம்பர் 1-ம் தேதி பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு அதேநாளில் இரவு 9 மணிக்கு கோவை போய்ச்சேரும்.
இந்த சிறப்பு ரயில் சேவைகளுக்கான முன் பதிவு நாளை தொடங்குகிறது.