தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு... ஆனால் சென்னையில் லேசான மழைதானாம்!
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கன மழைக்கும், சென்னையில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் உட்புற மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கி விட்டது. நேற்று முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. பரவலாக தமிழகம் முழுவதும் மழை பெய்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள், கோவை, திருப்பூர், நீலகிரி, காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் உட்புற மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வட கிழக்குப் பருவ மழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக உடுமலைப்பேட்டை மற்றும் வாடிப்பட்டியில் தலா 12 செமீ மழை பெய்துள்ளது. கோவை, பொள்ளாச்சியில் தலா 11 செமீ மழையும், திருமயத்தில் 8 செமீ, திருப்பூர், அவிநாசியில் தலா 6 செமீ மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்திலும், உட்புற மாவட்டங்களிலும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெயில்
அதேசமயம், இன்று காலை முதல் சென்னையில் பொதுவாக வெயில் அடித்துக் கொண்டுள்ளது. நேற்று லேசான மழையைச் சந்தித்த சென்னையில் இன்று பரவலாக வெயில் அடித்து வருகிறது.