ஜில், ஜில் சாரல் மழை...சிலு, சிலு தென்றல் காத்து...களைகட்டத் தொடங்கும் குற்றால சீசன்!
தென்மேற்குப் பருவமழை நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் குற்றாலத்தில் சீசன் களைகட்டுமா என்று ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் பயணிகள்
குற்றாலம் : மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெல்லிய சாரலும், தென்றல் காற்றுமாய் சீசன் தொடங்குவதற்கான அறிகுறி காணப்படுவதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வரத் தொடங்கியுள்ளனர்.
அருவிகள் நகரமான குற்றாலத்தில் கடந்த சில மாதங்களாகவே தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் குற்றாலத்தில் சீசன் காலங்கள் ஆகும்.
இந்த சீசன் காலத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போன்று வெண்ணிறத்தில் அருவியில் இருந்து நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். குற்றால அருவி நீரில் குளித்தாலே மனதிற்கும் உடலுக்கும் தெம்பு வந்தது போல் இருக்கும்.
ரம்மியமான சூழல்
இந்நிலையில் கேரளாவில் நாளை முதல் தென்மேற்குப் பருவமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதலே குற்றாலத்தில் சாரல் மழை, தென்றல் காற்று, மலைமீது மிதந்து செல்லும் மேகங்கள் என ரம்மியமான சூழல் நிலவுகிறது.
சுற்றுலாத்தளம்
காலை வேளைகளில் மூடிய வெண்பனி மேகம் அவ்வப்போது வந்து செல்லும் இளம் மஞ்சள் வெயில் என குற்றாலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறி வருகிறது. இங்கு நிலவும் இதமான சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர்.
குளிர்விக்கும் சாரல் மழை
கடந்த ஆண்டு சீசன் தாமதமாகவே தொடங்கியது என்றாலும் தண்ணீர் நவம்பர் இறுதிவரை கொட்டியது. இந்த ஆண்டு சீசன் எப்படி இருக்கும், குறித்த காலத்தில் தொடங்குமா அல்லது தாமதமாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் நிலவியது.
அக்னி நட்சத்திரம் முடியும் முன்பே சீசனுக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது திடீரென மேக கூட்டங்கள் திரண்டு மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான புளியரை பகுதிகளில் மெல்லிய சாரல் பெய்தது.
வியாபாரிகள் மகிழ்ச்சி
இன்று காலைமுதல் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மேகங்கள் மலைமுகடுகளில் தவழ்ந்து குளிர்ந்த தென்றலை தேகத்தை தழுவும் வண்ணம் அள்ளிக்கொடுத்து சென்றது. சூரியன் மங்கும்மாலை நேரங்களில்புளியரை, மேக்கரை, செங்கோட்டை, குண்டாறு,ஐந்தருவி,குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழையும் பெய்தது. இதனால் இந்தாண்டு குற்றால சீசன் முன்னதாகவே தொடங்கியுள்ளதால் சிறு மற்றும் பழ வியாபாரிகளும்,விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.