நாட்டையே அதிரவைத்த உசிலம்பட்டி பெண் சிசு கொலையை அம்பலப்படுத்திய செளபா
மூத்த பத்திரிகையாளர் செளபாதான் உசிலம்பட்டி பகுதியில் பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே கொலை செய்யப்படுவதை அம்பலப்படுத்தியவர்.
Recommended Video
சென்னை: போதைக்கு அடிமையான மகனை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் செளபாதான் உசிலம்பட்டி பகுதியில் பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே கொலை செய்யப்படுவதை அம்பலப்படுத்தியவர்.
குடும்ப உறவுகளில் எழும் சிக்கல் எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்கு எழுத்தாளர் செளபாவின் வாழ்க்கை சாட்சியாகிவிட்டது. பத்திரிகை உலக ஆளுமைகளில் மூத்தவர் செளபா.
தமது பத்திரிகை பணி காலத்தில் சமூக அவலங்களை அம்பலபடுத்துவதில் தீரா தாகமுடன் பணியாற்றியவர். உசிலம்பட்டி பகுதிகளில் பெண் சிசு கொலை நடப்பதை அம்பலப்படுத்தியவர்.
அவரது கட்டுரைகளால்தான் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அரசே திட்டங்களைக் கொண்டு வந்தது. குழந்தைத் திருமணங்களுக்காக வயதுக்கு வராத பெண்களின் பிறப்புறுப்பில் எருக்கம்பாலை ஊற்றி கட்டாய மாதவிடாய் உருவாக்குதலை அம்பலப்படுத்தியவரும் செளபாதான்.
இன்று மூத்த பத்திரிகையாளர்களாக வலம் வரும் பலருக்கும் செளபாதான் காட் பாதர். இவர்கள் மட்டுமல்ல மதுரை மண்சார்ந்து இயங்கும் திரை உலகக் கலைஞர்கள் பலரும் செளபாவுடன் இணைந்தவர்கள்.
மதுரை வட்டார மக்களின் வாழ்வியல் குறித்து அத்தனையும் அறிந்த மகத்தான மனிதர் செளபா. ஆனால் குடும்ப சிக்கலில் இன்று சிறைக்கு போகும் துயர நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்பது பத்திரிகையாளர்களை வேதனைப்பட வைத்துள்ளது.