கோகுல்ராஜ் வழக்கை விசாரித்த எஸ்ஐ, ஏட்டுக்கள் கைதாகிறார்கள்?.. எஸ்.பி. செந்தில்குமாருக்கு அதிரடி தடை!
நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த சப் இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர்கள் உள்ளிட்டோர் சிபிசிஐடி விசாரணையின்போது மாறி மாறிப் பேசி வருவதால் அவர்களைக் கைது செய்து விசாரிக்க அதிரடியாக யோசிக்கப்பட்டு வருகிறதாம். இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று டிஜிபி அலுவலகத்திலிருந்து உத்தரவு போயுள்ளதாம்.
திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா சந்தேகத்திற்கிடமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கபப்ட்டுள்ளது சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி நாமக்கல் வந்து முகாமிட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.
எஸ்.பி. செந்தில்குமார்
எஸ்.பி. செந்தில்குமாரிடம் நாகஜோதி தலைமையிலான டீம் தீவிர விசாரணை நடத்தியது. இதில் செந்தில்குமார் பல முறை விஷ்ணுப்பிரியாவுக்கு நெருக்கடி கொடுத்ததாக உறுதியாகத் தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரை தற்போது கிட்டத்தட்ட முடக்கும் நிலைக்கு காவல்துறை மேலிடம் கொண்டு வந்துள்ளது. அவர் நாமக்கல்லை விட்டு வெளியேறக் கூடாது என்று அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
எப்போது விசாரணைக்குக் கூப்பிட்டாலும் வர வேண்டும் என்றும் யாரையும் தேவையில்லாமல் சந்திக்கக் கூடாது என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
மாறி மாறிப் பேசும் எஸ்.ஐ. ஏட்டுக்கள்
இதற்கிடையே, கோகுல்ராஜ் வழக்கையும் விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், இந்த வழக்கை இதற்கு முன்பு விசாரித்து வந்த எஸ்.ஐ, தலைமைக் காவலர்களை அழைத்து விசாரித்துள்ளனர். அவர்களிடம் கூடுதல் டிஎஸ்பி ஸ்டாலின் தலைமையிலான டீம் விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின்போது, அவர்கள் மாறி மாறிப் பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களைக் கைது செய்து முறைப்படி விசாரணை நடத்தலாமா என்று யோசிக்கப்பட்டு வருகிறதாம்.