நான்கு தலை கொண்ட பிரம்மாவாக உள்ளார் எஸ்பி வேலுமணி.. சட்டசபையில் புகழ்ந்த ஓபிஎஸ்!
நான்கு தலை கொண்ட பிரம்மாவாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி செயல்படுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: நான்கு தலை கொண்ட பிரம்மாவாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி செயல்படுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் முதல்வர் பதவி விலகினால்தான் சட்டசபைக்கு வருவோம் என்று கூறியிருந்த திமுகவினர் இன்றைய சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இன்றைய சட்டசபை கூட்டத்தில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக அதிமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசும் போது திமுகவின் மாதிரி சட்டசபையை கிண்டலடித்து பேசினர்.
திண்டுக்கல் பதில்
சட்டசபையில் திமுக கொறடா சக்கரபாணி தனது தொகுதியில் சாலை வசதி குறித்து பேசினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இதுகுறித்து முதல்வர் 30ஆம் தேதியே விளக்கம் அளித்துவிட்டார்.
இப்போது தெரிகிறதா?
அன்றைய தினம் நீங்கள் மாதிரி சட்டசபையின் சபாநாயகராக இருந்தீர்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால் இப்போது தெரிகிறதா சபாநாயகர் பணி எவ்வளவு கடினம் என்று? என கேட்டார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தலையில்லாத உடல்
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில் திமுக உறுப்பினர் தாமோ அன்பரசன் உள்ளாட்சி அமைப்பு தலையில்லாத உடலாக செயல்படுவதாக கூறினார்.
பிரம்மாவாக செயல்படுகிறார்
அதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நான்கு தலை கொண்ட பிரம்மாவாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பாக செயல்படுகிறார் என புகழ்ந்தார்.
அமைச்சர் பதில்
இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடத்தப்படாவிட்டாலும், அதிகாரிகளைக் கொண்டு உள்ளாட்சி பணிகள் தொய்வில்லாமல் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.