20 ஆண்டுகளில் விண்வெளியில் மின்நிலையம் – இஸ்ரோ விஞ்ஞானி ராஜீவன் உறுதி
கன்னியாகுமரி: இருபது ஆண்டுகளில் விண்வெளியில் மின் நிலையம் நிறுவப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் திருவனந்தபுரம் இஸ்ரோ விஞ்ஞானி ராஜீவன்.
குமரி மாவட்டம் சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரியில் மின்னியல், மின்னணு மற்றும் சிவில் பொறியியல் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கில் பங்கேற்றார்.
அப்போது அவர், "விண்வெளியில் 24 மணிநேரமும் சூரியசக்தி கிடைக்கிறது. இதை சாதகமாக்கி, அதிகளவு செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவி, அவற்றை விண்ணிலேயே ஒருங்கிணைத்து மிகப் பெரிய விண்வெளி மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இது கடும் சவாலான செயலாகும்.
பன்னாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்தச் சாதனையை இன்னும் 20 ஆண்டுகளில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் இந்த மின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை பூமிக்கு அனுப்பும் வயர்லெஸ் தொழில்நுட்பங்களான நுண்அலை மற்றும் லேசர் ஒளிக்கற்றைகள் குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
இத்தகைய மின்காந்த ஒளிகற்றைகள் மூலம் குறைந்த இடைவெளியில் கம்பி இல்லாமல் மின்சாரத்தை அனுப்பும் தொழில்நுட்பத்தில் வெற்றி கண்டுள்ளோம். இதன்மூலம் செல்லிடபேசி, மடிக்கணினி மற்றும் பிற மின்உபகரணங்களுக்கு, மின்பொறி, கம்பி இணைப்பு தேவைப்படாது.
இந்த உபகரணங்கள் மின்சாரத்தைத் தானே கிரகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இவை இன்னும் 2 ஆண்டுகளில் மனித பயன்பாட்டுக்கு வரும்.
விண்வெளி மின்நிலையம் செயல்படத் தொடங்கும்போது உலகில் மின்பற்றாக்குறை தீரும். வானூர்திகளுக்கும், விண்வெளி ஓடங்களுக்கும் எரிபொருள் தேவையிருக்காது. விண்வெளி மின்நிலையத்தில் இருந்து மின்சாரத்தைப் பெற்று ரயில்கள், பேருந்துகள் போன்றவற்றை இயக்க முடியும்.
சக்தி வாய்ந்த சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் 30 சதவீதம் மட்டுமே பலன் கிடைத்துள்ளது.
எனவே இந்தியாவில் மின் தட்டுப்பாட்டைப் போக்க மாணவர்கள் தாம் கற்ற கல்வியைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.