தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏ-க்களுக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு அதிரடி நோட்டீஸ்!
தினகரன் தரப்பு ஆதரவு எம்எல்ஏ-க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை: கட்சிக்கு எதிராக செயல்படுவதாக தலைமைக் கொறடா ராஜேந்திரன் மனு அளித்துள்ள நிலையில் தினகரன் ஆதரவு 19 அதிமுக எம்எல்ஏ-க்களுக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதிமுக இணைப்புக்கு பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி 19 எம்எல்ஏ-க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதையடுத்து தமிழக அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன் இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தலைமை கொறடா என்ற முறையில் தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் 19 எம்எல்ஏ-க்களும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது.
எனவே கட்சிக்கு எதிராக செயல்பட்ட 19 எம்எல்ஏ-க்களின் பதவிகளையும் பறிக்க சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் தலைைம கொறடாவின் புகாருக்கு பதில் அளிக்க கோரி அந்த 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் 19 எம்எல்ஏ-க்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என கேட்டுள்ள சபாநாயகர், ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் உத்தரவிட்டுள்ளார்.