காங் எம்.எல்.ஏ விஜயதாரணி சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு விளக்கம் சொன்ன சபாநாயகர்
காங் எம்.எல்.ஏ விஜயதாரணி சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை : அவையில் நேற்று விஜயதாரணி விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்காத காரணத்தாலேயே நான் அவரை வெளியேற்ற வேண்டியது வந்தது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்றைய விவாதத்தின் போது, விளவங்கோடு தொகுதி எம் எல் ஏ விஜயதாரணி குமரி மாவட்ட பிரச்னையை எழுப்பினார். சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், அவரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவைக் காவலர்கள் அவரை வெளியேற்றினர். அப்போது, சபாநாயகர் தவறாகப் பேசியதாகவும், அவைக்காவலர்கள் தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் விஜயதாரணி குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து சபாநாயகர் இன்றைய விவாதத்தில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி சபை விதிகளை மதிக்காமல் அளவுக்கு அதிகமாகப் பேசினார்.
நான் இதுவரை எந்தப் பெண் உறுப்பினர்களையும் வெளியேற்றியதில்லை. ஆனால், அவரது நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லாததால், வெளியேற்ற உத்தரவிட்டேன். அவரது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தொடர்ந்து பலமுறை எச்சரித்தும் அவர் அதுபோன்று நடந்துகொண்டதாலேயே நான் நடவடிக்கை மேற்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.