நாளை மறு நாள் சட்டசபை கூடுகிறது. பெரும்பான்மையை நிரூபிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி வருகிற 18ம் தேதியே தனது பலத்தை சட்டசபையில் நிரூபிக்கவுள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 20ம் தேதி சட்டசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 18ம் தேதியேசட்டசபை கூடுகிறது.
ஆட்சி அமைக்க அழைக்காமல் இழுத்தடிப்பு செய்து கொண்டிருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று அதிமுக எம்எல்ஏக்களின் சட்டசபைக் குழு தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு பழனிச்சாமிக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
பதவியேற்பைத் தொடர்ந்து அடுத்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து 20ம் தேதி சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நாளை மறு நாளே அதாவது 18ம் தேதியே சட்டசபை கூட்டப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் முதல்வர்.
ஆட்சியைப் பிடித்த பி்ன்னரும் கூட அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் கொண்டு போய் அடைத்துள்ளனர். எனவே உண்மையிலேயே எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும்பான்மை பலம் உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கான விடை 18ம் தேதி தெரிய வரும்.