அதிமுக ஆட்சியில் 2வது முறையாக சிறப்புக் கூட்டத்தைக் கண்ட தமிழக சட்டசபை
சென்னை: தமிழக சட்டசபையின் அவசரக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
அவசரமாக கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்ள வசதியாக பலமுனைகளிலிருந்தும் அவர்களுக்குத் தகவல்கள் ஏற்கனவே பல வழிகளில் அனுப்பப்பட்டிருந்தது.
அதிமுக ஆட்சி அமைந்த பிறகு அவசரக் கூட்டம் நடத்தப்படுவது இது 2வது முறையாகும்.
குளிர்காலக் கூட்டத் தொடர்
சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தொடங்கியது. முதல் நாளில் ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. பெருமாளின் மறைவு மற்றும் 11 முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவுக்கான இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அன்று அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது.
அக்டோபர் 30ம் தேதி முடிந்தது
இந்தக் கூட்டம் பின்னர் அக்டோபர் 30-ந் தேதி நிறைவடைந்தது. தேதி குறிப்பிடப்படாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.
திடீர் அறிவிப்பு
இந்த நிலையில் சட்டசபை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், சட்டசபையின் அடுத்த கூட்டம் 12-ந் தேதி செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு பேரவை மண்டபத்தில் நடைபெறும் என்று அதில் அவர் கூறியிரு்தார். ஆனால் எதற்காக இந்த அவசரக் கூட்டம் என்பது குறித்து விளக்கப்படவில்லை.
2வது கூட்டம்
அதிமுக ஆட்சியில் நடைபெறும் 2வது சட்டசபை அவசரக் கூட்டம் இதுவாகும்.
கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பரில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் தற்போது இன்று சிறப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து.. ஏற்கனவே ஒரு தீர்மானம்
கடந்த அக்டோபர் மாதம் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான 24.10.13 அன்று முதல்வர் ஜெயலலிதா, இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
ஈவு இரக்கமற்ற தாக்குதல்
2011-ம் ஆண்டு மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நான், அப்பாவி இலங்கை தமிழர்கள் மீது ஈவு இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறினேன்.
பொருளாதார தடை விதிக்க வேண்டும்
இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தினை 8.6.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் முன்மொழிந்தேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது இது நாள் வரை இந்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இலங்கை நட்பு நாடா...
27.3.13 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், இலங்கை நாட்டை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும், இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில் போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்திடவும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதார தடையை விதித்திடவும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தனி ஈழம் குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் அரசினர் தீர்மானத்தினை நான் முன்மொழிந்தேன். அது இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மீதும் மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மக்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்க
எனவே ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும், தமிழக மக்களின் உணர்வுகளைத் தெரிவிக்கும் வகையிலும் கீழ்க்காணும் தீர்மானத்தினை நான் முன்மொழிகிறேன். தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். பெயரளவிற்கு கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது.
இலங்கையை நீக்குக
இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும். இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கிவைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசை தமிழ்நாடு சட்டசபை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்னும் தீர்மானத்தினை நான் முன்மொழிகிறேன் என்று அவர் பேசினார்.
அத்தனை பேரும் ஆதரவு
இந்த தீர்மானத்தின் மீது சட்டசபை கட்சிகள் அனைத்தும் கருத்து தெரிவித்தன. குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சிகளான திமுக, தேமுதிக ஆகியவையும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசின. இதையடுத்து தீர்மானம் எதிர்ப்பே இல்லாமல் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.