காணும் பொங்கலுக்காக சென்னையில் நாளை சிறப்பு பஸ்கள் இயக்கம்.. எங்கெல்லாம் போகுது தெரியுமா?
சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அண்ணாசதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், பெசன்ட்நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர் மற்றும் தீவுத்திடல் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப்பு:
சுற்றுலா தலங்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 16ம் தேதியான நாளை, சென்னை நகரின் முக்கிய இடங்களை காண வரும் பொதுமக்கள் வசதிக்காக, அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், கிஷிகிந்தா, குயின்ஸ்லேண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீவுத்திடல்
இதேபோல பெசன்ட் நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர் மற்றும் சுற்றுலா பொருட்காட்சி நடைபெறும் தீவுத் திடல் ஆகிய இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேடு, ஆவடி
பொதுமக்களின் வசதியை கருத்திற்கொண்டு, இச்சிறப்பு பேருந்துகள் டோல்கேட், ஆவடி, அய்யப்பன்தாங்கல், அடையார், காரனோடை, பெரும்பாக்கம், கேளம்பாக்கம், கண்ணகிநகர், ரெட்ஹில்ஸ், கண்ணதாசன் நகர், கோயம்பேடு பகுதிகளில் இருந்து இயக்கப்படும்.
பூவிருந்தவல்லி, செங்கல்பட்டு
இதேபோல, பூவிருந்தவல்லி, வடபழனி, அய்யனாவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், சுங்குவார்சத்திரம், நடுவீரப்பட்டு, ஈஞ்சம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு, மாதவரம், பட்டாபிராம், கே.கே.நகர், அம்பத்தூர், கிண்டி, தி.நகர் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும்.
சென்னைக்கு திரும்பும் மக்கள்
மேலும் பொங்கல் பண்டிகையை முடித்து சென்னை திரும்பும் தென்மாவட்ட பொதுமக்களின் வசதிக்காக, 17ம் தேதி அதிகாலை 3.30 மணி முதல் சென்னை புறநகர் பஸ் நிலையம், பெங்களத்தூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களிலிருந்து பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.