கலாமுக்காக.. சென்னை முதல் ராமேஸ்வரம் வரை சிறப்பு பஸ்கள் - அரசு பேருந்துக் கழகம் திட்டம்
சென்னை: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் இறுதிச் சடங்கு ராமேஸ்வரத்தில் நாளை நடைபெற உள்ள நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் ராமேஸ்வரம் செல்லும் வகையில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேகலாயாவில் நேற்று முன்தினம் மறைந்த மக்களின் ஜனாதிபதி உடல் நேற்று டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டது. இன்று மதுரை மார்க்கமாக ராமேஸ்வரம் சென்றடையும் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு நாளை ராமேஸ்வரம், பேய்க்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், அஞ்சலி செலுத்தவும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் செல்லும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிகின்றது. பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளை இயக்க அதிகாரிகள் தயாராக இருக்குமாறு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தனியார் பேருந்து நிறுவனமான பர்வீன் டிராவல்ஸ் நேற்று 4 பேருந்துகளை இலவசமாக இயக்கியதுடன், இன்றும் 4 பேருந்துகளை ராமேஸ்வரத்திற்கு இலவசமாக இயக்குவதாக அறிவித்துள்ளது.