பொங்கல் ஸ்பெஷல்: தமிழகத்தில் 7,250 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் 7,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தொடர்ந்து நான்கைந்து நாட்கள் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ரயில்களின் முன்பதிவு ஏற்கனவே நிரம்பி விட்டது.
இதையடுத்து அறிவிக்கப் பட்ட சிறப்பு ரயில்களில் முன்பதிவும் அரைமணி நேரத்திலேயே முடிந்தது. இதனால், மக்களின் அடுத்த நம்பிக்கை பேருந்துகள் தான். இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகள் நாளை மறுநாள் (10ஆம் தேதி) முதல் 14ஆம் தேதி வரை 5 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த 5 நாட்களில் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 4,655 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நாளை மறுநாள் ( 10ம் தேதி ) சென்னை, கோயம்பேட்டில் இருந்து 600 பேருந்துகளும், 11ஆம் தேதி 470 சிறப்பு பேருந்துகளும், 12ஆம் தேதி 720 பேருந்துகளும், 13ஆம் தேதி 1,408 பேருந்துகளும், 14ஆம் தேதி 1,457 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
இதேபோல், சென்னை தவிர்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து நாளை மறுநாள் முதல் 14ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் 2,595 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, நாளை மறுநாள் (10ஆம் தேதி) 300 சிறப்பு பேருந்துகளும், 11ஆம் தேதி 400 பேருந்துகளும், 12ஆம் தேதி 500 பேருந்துகளும், 13ஆம் தேதி 595 பேருந்துகளும், 14ஆம் தேதி 800 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
சுமார் 300 கி.மீ. தூரத்திற்கு மேல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in என்ற இணைய தளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கென சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்து, கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் பேருந்துகள் குறித்த புகார்களை 044-24794709 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.