ஈரோட்டில் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகள் பதிவு சிறப்பு முகாம்: பலர் திரண்டதால் பரபரப்பு
அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஈரோடு: அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பதிவு செய்வதற்கான ஈரோட்டில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பதிவு செய்ய நீதிமன்றம் தடைவிதித்ததை தொடர்ந்து பத்திர பதிவு முழுமையாக முடங்கியது. இதனையடுத்து நீதிமன்றத்தின் தடைஉத்தரவை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
தொடர்ந்து அனுமதிபெறாத வீட்டுமனைகளை வரைமுறைபடுத்த நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பதிவு செய்ய 6 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி மற்றும் மொடக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
மேலும் பதிவு செய்ய காலதாமதம் ஆனதால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. இதனால் சிறப்பு முகாம்கள் கூடுதலாக நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.