வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி வாய்ப்பு... சிறப்பு முகாம் நடக்கிறது !
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இன்று ( மார்ச் 9 ஞாயிறுக்கிழமை) சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஞாயிறுக்கிழமை நடத்தப்படுகிறது. அனைத்து வாக்கு சாவடிகளிலும் ஊழியர்கள் அமர்ந்து பெயர் சேர்த்தல், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
தேவையான ஆவணங்கள்
அங்கேயே விண்ணப்பப்படிவம் கிடைக்கும். புதிதாக பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் முகவரி சான்று, போட்டோ, வயது சான்றிதழ் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். காலை 10 மணி முதல் 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 60,418 ஓட்டு சாவடிகளில் இதற்கான பணிகள் நடக்கிறது.
ஆன்லைன் விண்ணப்பம்
நாளைய முகாமுக்கு செல்ல முடியாதவர்கள் ஆன்லைன் மூலமும், மண்டல தேர்தல் அலுவலகம் மூலமும், தாலுகா அலுவலகம் மூலமும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மனு தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
புகைப்பட அடையாள அட்டை
ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 27 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதில் 8 லட்சம் பேருக்கு புகை படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு நாளைய முகாமில் வழங்கப்பட இருக்கிறது.
விடுபட்டவர்கள்
வாக்காளர் புகைப்பட அட்டை இருந்து அவர்களுக்கான பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையென்றால் ஓட்டு போட இயலாது. எனவே அவர்களும் நாளைய முகாமில் பெயர்களை சேர்க்கலாம்.
தேர்தல் நடத்தை விதிகள்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஒவ்வொரு கட்சியினரும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினோம். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தி கூறினேன்.
3 பறக்கும் படை
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு குழுவிலும் மாஜிஸ்திரேட்டு அந்தஸ்தில் உள்ள அதிகாரி, ஒரு போலீஸ் அதிகாரி, 4 போலீசார், வீடியோ கிராபர் ஆகியோர் இருப்பார்கள்.இது தவிர திடீரென சோதனை செய்யவும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் படம் மறைப்பு
தமிழ்நாட்டில் ‘அம்மா' என்கிற பெயர், எம்.ஜி.ஆர். சமாதியில் உள்ள முகப்பு தோரணம், அம்மா குடிநீர் பாட்டில், சிறிய பஸ்களில் உள்ள இலைகள், டி.ஜி.பி.யை மாற்றுவது தொடர்பான புகார்கள் ஆகியவை பற்றி தேர்தல் கமிஷனில் இருந்து இன்னும் தகுந்த உத்தரவு வரவில்லை.
ஆனாலும் அம்மா குடிநீர் பாட்டிலில் உள்ள முதல்வர் படம், அம்மா உணவங்களில் உள்ள முதல்வர் படம் ஆகியவற்றை பேப்பர் மூலம் மறைத்துள்ளோம்.
சுற்றுப் பயண விபரம்
கட்சிகளின் முக்கிய தலைவர்கள் (ஸ்டார் பேச்சாளர்கள்) தங்களது பிரசார சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 5-ந்தேதிக்குள் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும்.
எந்த ஒரு நிகழ்ச்சியிலும் யாரும் பரிசு பொருட்கள் கொடுக்க கூடாது. ஆலந்தூரில் மகளிர் தின விழாவில் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தி.மு.க. சார்பில் புகார் கடிதம் கொடுத்ததாக சொல்கிறார்கள். இது பற்றி விசாரிக்கப்படும்.
நடத்தை விதிகள் அமல்
தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் எந்த விழாக்களிலும் பரிசு பொருட்களை தவிர்க்க வேண்டும். திருமண விழாவில் மணமகன்-மணமகளுக்கு வேண்டுமானால் பரிசு கொடுக்கலாம். அங்கு வரும் கூட்டத்தினருக்கு பரிசு பொருள் கொடுக்க கூடாது.
இலவச பொருட்கள்
2 தினங்களுக்கு முன் தேர்தல் தேதி அறிவித்த சமயத்தில் உளுந்தூர்பேட்டை, கம்பத்தில் இலவச மிக்சி, கிரைண்டர், வினியோகிக்கப்பட்டு இருந்தது. உடனடியாக அவை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது எங்கும் இதுபோல வழங்கப்படவில்லை.
சிறப்பு தொலைபேசி எண்
ஓட்டுக்காக யாரேனும் பணம் கொடுத்தால் இது பற்றி புகார் தெரிவிக்க 1950 என்ற தொலைபேசி எண் செயல்பாட்டில் உள்ளது. இதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணம் பறிமுதல்
தேர்தலில் செலவழிக்கும் செலவு தொகைகளை வேட்பாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டத்தில் ரூ.22 லட்சத்து 51 ஆயிரத்து 320 ரூபாயும், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.14 லட்சத்து 50 ஆயிரமும் பணமாக கொண்டு வரப்பட்ட போது சோதனையில் சிக்கியது. இதற்கு தகுந்த ஆவணங்களை காட்டினால் பணம் திருப்பி கொடுக்கப்படும். இல்லையென்றால் வருமான வரித்துறையினரிடம் கொடுக்கப்படும்.
ஓட்டு போட விழிப்புணர்வு
வாக்காளர் இடையே ஓட்டு போடும் விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோ திரைப்படங்கள் 2 புதிதாக தயாரிக்கப்படுகிறது. இவைகள் கேபிள் டி.வி. இணைய தளம் மற்றும் சினிமா தியேட்டரில் வெளியிடப்படும் என்று பிரவீண்குமார் கூறினார்.