மிரட்டும் டெங்கு: நிலவேம்பு நீர், பப்பாளி இலைச்சாறு வேணுமா? அம்மா உணவகம் போங்க!
சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு காய்ச்சலின் தீவிரத்தை தடுக்க அம்மா உணவகங்களில் இலவசமாக நிலவேம்பு நீர், பப்பாளி இலைச்சாறு வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சென்னையில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும் காலங்களில் பொது மக்களுக்கு பொதுவாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படும். ஆனால், அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல. டெங்கு காய்ச்சலை முறையான எலிசா பரிசோதனை மூலம் மட்டுமே உறுதி செய்ய இயலும்.
தற்போது ஜனவரி 2015 முதல் இதுநாள் வரை 93 நபர்களுக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருப்பது சென்னை மாநகராட்சி பகுதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, சென்னை மாநகராட்சி மூலம் அனைத்து காய்ச்சல் கண்டவர்களின் விவரங்கள் தினந்தோறும் பெறப்பட்டு சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் கள ஆய்வு செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நலக்கல்வி விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் அறிவுரையின் பேரில், இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு நீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலை வேம்பு இலைச்சாறு போன்றவை அம்மா உணவகங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் குடிசைப் பகுதிகளிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான ரத்த அணுக்கள், ரத்த கூறுகள், ரத்தம் மற்றும் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய குடிசைப் பகுதி தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசு உற்பத்திக்கு காரணமான டயர், கொட்டாங்குச்சி மற்றும் தேவையற்ற பொருட்கள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது.
தொற்று நோய்களை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை அழிப்பதற்கு புகை பரப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. போதுமான புகைப்பரப்பும் இயந்திரங்கள், கொசுக்கொல்லி மருந்துகள் சென்னை மாநகராட்சியின் இருப்பில் உள்ளன. ஒவ்வொரு வட்டாரத்திலும், வட்டார அளவிலான விரைவு செயல்பாட்டுக் குழு தயார் நிலையில் உள்ளது. இக்குழுவானது காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிக்கு சென்று காய்ச்சலின் காரணத்தை உடனுக்குடன் கண்டறிந்து, போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.