நோட்டா, 144 தடை உத்தரவு... தமிழக தேர்தல் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்கள்
சென்னை: இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.
கடந்த தேர்தல்கலைப் பார்க்கிலும், இத்தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். அதனைக் கருத்தில் கொண்டும் இத்தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தவும் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, 144 தடை உத்தரவு, தியேட்டர்கள் மற்றும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை எனப் பல்வேறு புதிய நடவடிக்கைகளை தமிழகத்தில் அமல் படுத்தியுள்ளது.
இதோ இத்தேர்தல் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக...
மொத்த வாக்காளர்கள்...
தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 5.5 கோடி ஆகும். அனைவரும் வாக்களிக்க ஏதுவாக தமிழகத்தில்28,224 கட்டிடங்களில் 60,818 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும்...
சென்னையில் உள்ள வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் 37 லட்சத்து 75 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக வடசென்னை தொகுதியில் 1,051 வாக்குச்சாவடிகளும், மத்திய சென்னையில் 1,153 வாக்குச்சாவடிகளும், தென்சென்னையில் 1,133 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 4,072 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
3 வாக்குப்பதிவு எந்திரங்கள்...
தமிழகத்திலேயே அதிகபட்சமாக 42 வேட்பாளர்கள் தென்சென்னை தொகுதியில் களத்தில் உள்ளனர். இதனால், இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மத்திய சென்னையில் 2....
இதேபோல், மத்திய சென்னையில் 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், அங்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வடசென்னையில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
பெரிய, சிறிய தொகுதிகள்....
தமிழகத்திலேயே மிகப்பெரிய லோக்சபா தொகுதி ஸ்ரீபெரும்புதூர். இங்கு 18.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல், மிகச்சிறிய தொகுதி நாகப்பட்டினம். இங்கு 11.8 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
மின்னணு எந்திரங்கள்...
இத்தேர்தலுக்காக மொத்தம் 1.19லட்சம் மின்னணு எந்திரங்கள் பயன் படுத்தப் படுகிறது. 2.93 லட்சம் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
களத்தில் உள்ள வேட்பாளர்கள்...
பரபரப்பான தேர்தல் களத்தில் 40 தொகுதிகளுக்கு மொத்தம் 844 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் பெண் வேட்பாளர்கள் 55 பேர். அதிகபட்சமாக தென்சென்னையில் 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இரண்டு ஓட்டு...
அதேபோல், நாடாளுமன்ற தேர்தலுடன் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடப்பதால், அந்த சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 316 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் 2 ஓட்டுபோட உள்ளனர்.
பாதுகாப்புப் பணியில்...
தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.43 லட்சம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுவரை பறக்கும்படை சோதனையில் தமிழகம் முழுவதும் 50 கோடி சிக்கியுள்ளது.
நேரம் அதிகரிப்பு...
வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து ஓட்டுப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பாதுகாப்பு...
மொத்தம் உள்ள வாக்குச்சாவடிகளில் 9224 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை எனக் கண்டறியப்பட்டு அவற்றிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது.
நோட்டோ வசதி...
இத்தேர்தலில் தான் முதன்முறையாக நோட்டோ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காளர்கள் பதிவு செய்யலாம்.
மதுபானம் விற்கத் தடை...
லோக்சபா தேர்தல் நாட்களில் வன்முறையை தடுக்கும் வகையில் 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
144 தடை உத்தரவு...
நேற்று முன்தினம் மாலை முதல் இன்று காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. பணப்பட்டுவாடா மற்றும் வன்முறையைத் தடுக்கவே இவ்வுத்தரவு பிறப்பிக்கப் பட்டதாக தேர்தல் ஆனையம் விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புகார்களுக்கு...
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004257012 வழங்கப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பு...
வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்படும் வாக்குச்சாவடி நிகழ்வுகளை பொதுமக்கள் public.gelsws.in இணைய தளம் மூலம் நேரலையாக பார்க்கும் வசதி இத்தேர்தலில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
ஒப்புகைச் சீட்டு...
தேர்தலில் ஒப்புகைச் சீட்டு முறை சென்னையின் சில இடங்களில் முதல்கட்டமாக சோதனை செய்து பார்க்கப் பட உள்ளது.
பிரெய்லி முறை....
பார்வையற்றவர்களும் வாக்களிக்கும் வகையில் பிரெய்லி முறை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.